‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு!

Published On:

| By christopher

Allocation of funds for the 'Tamil Puthlavan' project!

அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு இன்று (ஜூலை 25) அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் மக்களிடையே பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.

இதனைத்தொடர்ந்து அரசு பள்ளியில் பயின்ற உயர் கல்வி மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கும் வகையில் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம் வரும் ஆகஸ்டு மாதம் முதல் தொடங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்து இருந்தார்.

அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு நேற்று வெளியிட்டது. இந்த நிலையில் தற்போது இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி தமிழ்ப் புதல்வன் திட்டத்திற்கு  ரூ.401.47 கோடியை தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் இத்திட்டத்தின் மூலம் முதற்கட்டமாக 3.28 லட்சம் மாணவர்கள் பயனடையவுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழிகாட்டு நெறிமுறைகள் என்ன?

தமிழ்ப் புதல்வன் திட்டம் மூலம் உதவித்தொகை பெற 6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளி (ஆங்கிலம் மற்றும் தமிழ் மீடியம்), அரசு உதவி பெறும் பள்ளிகளில் (தமிழ் மீடியம் மட்டும்) மாணவர்கள் படித்திருக்க வேண்டும்.

தகுதியுள்ள மாணவர் தனக்கென்று ஆதார் எண் வைத்திருக்க வேண்டும். அல்லது, ஆதார் எண்ணை பெறுவதற்கு விண்ணப்பித்திருக்க வேண்டும்.

ஆதார் எண் இல்லாத மாணவர்கள், அந்த எண்ணை பெறுவதற்காக, அதற்கான மையங்களுக்கு சென்று விண்ணப்பித்தல் வேண்டும்.

ஆதார் எண் இல்லாத நிலையிலும் இந்த உதவித்தொகையைப் பெற மேலும் சில அடையாள ஆவணங்களில் ஏதாவது ஒன்றை அளிக்க வேண்டும்.

அதன்படி, ஆதார் எண்ணுக்காக விண்ணப்பித்துள்ள அடையாளச் சீட்டு; ஆதார் எண்ணுக்காக விண்ணப்பித்துள்ளதற்கான மனுவின் நகல்; வங்கி அல்லது தபால் கணக்கு புத்தகம்; பான் அட்டை, பாஸ்போர்ட், ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை; மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்ட அட்டை; கிசான் கணக்கு புத்தகம்; ஓட்டுனர் உரிமம்; தாசில்தார் அல்லது ‘கெசடட்’ அதிகாரி அளித்துள்ள அடையாளச் சான்றிதழ், இவற்றில் ஏதாவது ஒன்றை அளிக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களும் இதில் தேவையான ஏற்பாடுகளை செய்ய வேன்டும்.

இந்த தகவலை அனைத்து மாணவர்களுக்கும் தெரியும் வகையில் கல்வி நிறுவனங்கள் விளம்பரப்படுத்தி, அருகிலுள்ள ஆதார் மையங்களுக்கு சென்று ஆதார் எண்ணை பெற அறிவுறுத்த வேண்டும்.

ஆதார் மையம் இல்லாத பகுதி என்றால், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களே ஆதார் நம்பரை பெறும் வசதிகளை ஏற்படுத்தி மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்ய உதவ வேண்டும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

இத எதிர்பார்க்கவே இல்ல… அடியோடு சரிந்த தங்கம் விலை!

சரிவுடன் தொடங்கிய வர்த்தகம்… இன்று கவனம் செலுத்த வேண்டிய பங்குகள் எவை?

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel