ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணத்தில் நாளை (நவம்பர் 11) காங்கிரஸ் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர் என்று மகாராஷ்டிர முன்னாள் முதலமைச்சரும் மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவருமான அசோக் சவான் தெரிவித்துள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நாடு முழுவதும் இந்திய ஒற்றுமை (பாரத் ஜோடோ) நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய அவரது நடைபயணம் கேரளா, ஆந்திரா வழியாக தெலங்கானா சென்றடைந்தது.
இந்த நிலையில் ராகுல் காந்தி நடைபயணம் மகாராஷ்டிராவுக்குள் நுழைந்துள்ளது.
இதையடுத்து நான்டர் மாவட்டம் வந்த ராகுல் காந்தியை மாநில காங்கிரஸ் நிர்வாகி அசோக் சவான் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
தொடர்ச்சியாக காங்கிரஸ் எம்.பி ராகுல், கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் மகாராஷ்டிர மாநிலத்தின் நாந்தேட்டில் இருந்து பாரத் ஜோடோ யாத்திரையைத் தொடங்கினார்.
அப்போது, மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் முன்னிலையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அசோக் சவான், “தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சிவசேனாவின் ஆதித்யா தாக்கரே ஆகிய காங்கிரஸ் கூட்டணி கட்சியின் தலைவர்கள் நாளை (நவம்பர்11) இந்திய ஒற்றுமை பயணத்தில் கலந்து கொள்வார்கள். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று (நவம்பர் 10) பங்கேற்கிறார்.
இதேபோன்று, தேசியவாத காங்கிரஸ் தலைவர்களான ஜெயந்த் பாட்டீல், சுப்ரியா சுலே மற்றும் ஜிதேந்திரா ஆவாத் ஆகியோர் இந்தப் பாதயாத்திரையில் கலந்து கொள்வார்கள்” என்று தெரிவித்துள்ளார்.