”பள்ளி மாணவி ஸ்ரீமதி சாவுக்கு நீதி வேண்டும். குற்றவாளிகளைக் குண்டர்தடுப்புக் காவலில் சிறைப்படுத்த வேண்டும். பொய்வழக்கில் சிறைப்படுத்தப் பட்டோரை விடுதலை செய்ய வேண்டும்” ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கள்ளக்குறிச்சியில் நேற்று (ஆகஸ்டு 13) மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி மாணவி மரண வழக்கில் அப்பாவிகளை கைது செய்து போலீஸ் துன்புறுத்தி வருவதாகவும், சாதிய உள் நோக்கத்தோடு போலீஸ் செயல்பட்டு வருவதாகவும் விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
ஆர்பாட்டத்தில் பேசிய தொல். திருமாவளவன், “கள்ளக்குறிச்சி கலவரத்தில் விடுதலை சிறுத்தைகள் மீது சிலர் களங்கம் சுமத்திக் கொண்டிருக்கிறார்கள்.
நாம் அந்த பள்ளியில் டொனேஷன் கேட்டதாகவும் அவர்கள் கொடுக்காததால் இவ்வாறு செய்ததாகவும் கிளப்பிவிடுகிறார்கள்.
எந்த கல்வி நிறுவனத்துக்கும் நாம் தொந்தரவு கொடுத்தது கிடையாது. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று நம்மைப் பற்றி பேசுகிறார்கள்.
அந்தக் கலவரத்தில் ஈடுபட்டதாக அப்பாவி மாணவர்களை குறிப்பாக எஸ்.சி. சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்களை போலீஸ் தேடித் தேடி பிடித்து கைது செய்திருக்கிறது.
அந்த வீடியோ ஃபுட்டேஜை வைத்து ஒவ்வொருவராக பிடிக்கும் போலீஸ், பிடித்த பிறகு சாதிய கேட்குறான். ஃபுட்டேஜ்ல இருக்கிற எல்லாரையும் பிடிச்சு உள்ள போடு.
ஆனா வேற சாதிய சொன்னா விட்டுடறான். எஸ்சின்னு சொன்னா உள்ள புடிச்சு போட்டுறான். போலீசுக்கு ஏன் இந்த மைண்ட் செட்? ஏன் இந்த சாதீய அப்ரோச்?
அதுலயும் இன்னொரு சாதிய அமைப்பு பிடிச்சுக் கொடுக்குற எல்லாரையும் உள்ள போடுறாங்க.

தாளாளர் மகன்கள் ஏன் இன்னும் விசாரிக்கப்படவில்லை?
உண்மையான குற்றவாளிகளை குண்டர் தடுப்புச் சட்டத்தில் போடுங்கள். தாளாளர் குடும்பத்தைச் சேர்ந்த இரு மகன்கள் ஏன் இன்னும் விசாரிக்கப்படவில்லை. அந்த கேம்பஸ் உள்ளேயே அவர்கள் வீடு இருக்கிறது.
அந்த கேம்பஸுக்கு உள்ளேயேதான் மாணவிகளும் இருக்கின்றனர். அவர்களை அழைத்து ஏன் விசாரிக்கவில்லை? இந்த கேள்வியை எழுப்ப வேண்டுமா வேண்டாமா? இந்துக்களின் பாதுகாவலர் என்று சொல்கிற பாஜக இதுவரை ஸ்ரீமதிக்காக ஏன் ஒரு இரங்கல் கூட தெரிவிக்காதது ஏன்? ஸ்ரீமதி கிறிஸ்துவ பெண்ணா? முஸ்லிம் பெண்ணா? பாஜக எல்லாவற்றிலும் சாதி பார்த்து மதம் பார்த்து இனம் பார்த்து பண்ணும். ஆனால் நீதி பார்த்து பண்ணுகிற இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள்.
பெயில் போடக் கூட தெரியவில்லை

நாங்கள் வன்முறையில் ஈடுபடவில்லை என்று சொல்வதற்காக இந்த ஆர்பாட்டம் இல்லை. ஸ்ரீமதி மரணத்தில் நீதி வேண்டும். கைது செய்யப்பட்டவர்கள் மீது குண்டாஸ் போட வேண்டும்.
பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுதலை செய்து விட வேண்டும். பெயில் போடுவது எப்படி என்று தெரியாமல் கூட மாணவர்கள் குடும்பத்தினர் தவிக்கிறார்கள். காவல்துறையினரின் அடாவடி தனத்தால் பொய் வழக்கில் சிறைபிடிக்கப்பட்டிருக்கிற வசந்த், குடியரசு போன்ற குரூப் தேர்வு எழுத இருந்த மாணவர்களை விடுதலை செய்ய வேண்டும். முதல்வர் அவர்கள் இதில் தலையிட வேண்டும்” என்று பேசினார் திருமாவளவன்.
திருமாவளவனின் அழைப்பை ஏற்று ஆயிரக்கணக்கான சிறுத்தைகள் இந்த ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டனர். திமுகவின் கூட்டணிக் கட்சியாக இருந்தாலும் வரும் ஆகஸ்டு 17 தனது பிறந்தநாளுக்கு முதல்வர் வரும் நிலையிலும் கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தமிழக போலீஸாரை விமர்சித்துப் பேசியிருக்கிறார் திருமாவளவன் என்பது குறிப்பிடத் தக்கது.
-வேந்தன்
Comments are closed.