எடப்பாடியின் கன்னி ஆர்பாட்டம்!

Published On:

| By Jegadeesh

மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் ( ஜூலை 25 )ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. 

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று ( ஜூலை 18 ) நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மின் கட்டண உயர்வை வெளியிட்டார். இந்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி கே பழனிசாமி இன்று ( ஜூலை 19 ) அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் , “மத்தளத்திற்கு இரண்டு பக்கம் இடி. திமுக ஆட்சியில் அப்பாவி மக்கள் நான்கு பக்கமும் இடி வாங்கி நசுங்கி, தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு, வேலை வாய்ப்பின்மை, வருமான இழப்பு என்று சிக்கி அன்றாட வாழ்வை நடத்த முடியாமல் விழி பிதுங்கி நிற்கும் தமிழக மக்கள், தற்போதுதான் மெல்ல மெல்ல தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்து கொண்டிருக்கின்றனர்.

மக்களைக் காப்பாற்றுவதற்காகவே அவதாரம் எடுத்த திராவிட மாடல் நாங்கள் தான் என்று தம்பட்டம் அடித்து, வாய்ச் சவடால் வீரர்களாகத் திரியும் திமுக அரசின் ஆட்சியாளர்கள், மக்களை வஞ்சிக்கும் செயல்களையே தொடர்ந்து செய்து வருகிறார்கள். எதிர்க்கட்சிகள் மீது பொய் வழக்கு போடுவதையும், மாற்றுக் கருத்து தெரிவிப்பவர்களை, ’இம் என்றால் சிறைவாசம், ஏன் என்றால் வன வாசம்’ என்று காராகிருஹத்திற்குள் அடைக்கும் செயல் ஒன்றையே கண்ணும் கருத்துமாக செய்து வரும் திமுக அரசு, மக்களைக் காக்கும் கடமையில் இருந்து தவறுகிறது.

2022-23ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை திமுக அரசு தாக்கல் செய்யும்போது, வரியில்லா பட்ஜெட் அளித்திருக்கிறோம் என்று மார்தட்டிவிட்டு, துறை தோறும் ஏதாவது ஒரு விதத்தில் வரி உயர்வு, கட்டண உயர்வு என்று அறிவித்து, மக்களை ஏமாற்றி வருகிறார்கள். மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, குடிநீர், கழிவு நீர் இணைப்பு கட்டணங்கள் உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம், ஒழுங்கு சீர்கேடு, சட்டமன்றப் பொதுத் தேர்தலில், திமுக அளித்த முக்கிய வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றாதது உட்பட, மக்களின் அன்றாட அத்தியாவசியத் தேவைகளான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், காய்கறிகள் போன்றவற்றின் இமாலய விலை உயர்வுகளால் பரிதவிக்கும் அப்பாவி மக்களை, இந்தக் கொடுங்கோல் ஆட்சியின் கொடூரக் கரங்களில் இருந்து காப்பாற்றும் வகையில், அனைத்து மாவட்டங்களிலும், ஒருங்கிணைந்த சென்னை மாநகரிலும், 25.07.2022 – திங்கட் கிழமை காலை 10 மணியளவில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். 

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களுக்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள் செய்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். பொதுமக்கள் நலனை முன்வைத்து, மாவட்டங்களில் நடைபெற உள்ள இந்த ஆர்ப்பாட்டங்களில், சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்களும், முன்னாள் அமைச்சர்களும், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், கழக சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளும், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் கழக நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் பெருந்திரளான அளவில் கலந்து கொண்டு, தங்களது கடும் எதிர்ப்பைத் தெரிவித்திட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்கும் கழக நிர்வாகிகளும், கழக தொண்டர்களும், பொதுமக்களும், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி கே. பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பின் நடக்கவிருக்கும் முதல் ஆர்ப்பாட்டம் இது என்பதால் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த ஆர்பாட்டங்களில் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பங்கேற்பதா என்றும், சென்னை அல்லது மதுரையில் பங்கேற்கலாமா என்றும் ஆலோசித்து வருகிறார் என்கிறார்கள் அதிமுக வட்டாரங்களில்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel