“அதிமுக 51வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் தங்களது மாவட்டங்களில் சிறப்புக் கூட்டம் நடத்த வேண்டும்” என அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக பொன்விழா ஆண்டை நிறைவு செய்து, அக்டோபர் 17ம் தேதி அன்று 51வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
இதை முன்னிட்டு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை இன்று (அக்டோபர் 8) வெளியிட்டுள்ளார்.
அதில், ”அக்டோபர் 17 மற்றும் 20, 26 ஆகிய தேதிகளில் அதிமுகவின் 51வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டங்கள் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும், புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் நடைபெற உள்ளது.
இதில், அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் கழக சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும்.
மாவட்டச் செயலாளர்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து அதிமுக அணிகளுடன் இணைந்து இந்த சிறப்புக் கூட்டத்தை நடத்திட வேண்டும்.
அவர்கள் சிறப்புப் பேச்சாளர்களுடன் இணைந்து பொதுக் கூட்டங்களை சிறப்பாக நடத்தி அதன் விபரங்களை தலைமைக் கழகத்துக்கும், ’நமது புரட்சித் தலைவி அம்மா’ நாளிதழுக்கும் அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும், கழக அமைப்புகள் செயல்பட்டு வரும் அனைத்து இடங்களிலும் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கும் படங்களுக்கும் மாலை அணிவித்து அன்னதானம் வழங்கி சிறப்பிக்க வேண்டும்” என அதில் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஜெ.பிரகாஷ்