அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கைச் சென்னை உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
கடந்த ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார். உச்ச நீதிமன்றத்தைப் பன்னீர் செல்வம் நாடிய நிலையில், உயர் நீதிமன்றத்துக்கே வழக்கைத் திருப்பி அனுப்பியது உச்ச நீதிமன்றம். இந்த வழக்கை மூன்று வாரத்தில் முடிக்கவும் உத்தரவிட்டது.
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்குகளில் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பிறப்பித்த உத்தரவுகள் ஓபிஎஸ் தரப்புக்குப் பின்னடைவாகவே இருந்தது. இந்நிலையில் வேறு நீதிபதி முன்பு வழக்கை மாற்றுமாறு பன்னீர் மற்றும் அவரது ஆதரவாளரான வைரமுத்து ஆகியோர் தலைமை நீதிபதிக்கு மனு கொடுத்தனர்.
இதற்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி ஓபிஎஸ் தரப்புக்குக் கண்டனம் தெரிவித்தார். இதையடுத்து ஓபிஎஸ் தரப்பு மன்னிப்பு கோரியதுடன் இவ்வழக்கில் கிருஷ்ணன் ராமசாமியே நீதிபதியாக நீடிக்க வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்தது.
எனினும் அதிமுக பொதுக்குழு வழக்கை யார் நடத்துவது என உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியே முடிவெடுக்கட்டும் எனப் பரிந்துரைத்தார் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி .
இந்நிலையில் வழக்கை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரிப்பார் என்று தலைமை நீதிபதி தெரிவித்தார். இன்று (ஆகஸ்ட் 8) முதல் விசாரணை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, இன்றைய தினம் வழக்கு விசாரணைக்கு வந்த போது, மூத்த வழக்கறிஞர் குருகிருஷ்ணகுமார் ஆஜராக உள்ளதால் வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. பன்னீர்செல்வம் தரப்பு கோரிக்கையை ஏற்ற நீதிபதி, வழக்கை நாளை மறுதினத்துக்கு (ஆகஸ்ட் 10) ஒத்திவைத்தார்.
பிரியா
வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!