அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் முதல்முறையாக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஏப்ரல் 7-ஆம் தேதி நடைபெற உள்ளது.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் கடந்த மார்ச் 28-ஆம் தேதி தள்ளுபடி செய்தது.
இதனை தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் முதல் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் என்பதால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
“அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் வருகின்ற ஏப்ரல் 7-ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு தலைமை கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் தலைமை கழகம் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் வைத்து நடைபெற உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு பூத் கமிட்டி அமைப்பது, கூட்டணி கட்சிகள் விவகாரம், கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது, எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை விவகாரம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இன்று கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து அதிமுக மாநில செயலாளர் எஸ்.டி.குமார் தலைமையில் பெங்களூருவில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
செல்வம்
கிச்சன் கீர்த்தனா: தக்காளி சாப்பிட்டால் கிட்னியில் கற்கள் வரும் என்பது உண்மையா?