நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனின் 68வது பிறந்தநாள் இன்று (நவம்பர் 7 ) கொண்டாடப்படுகிறது.
அவருக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் ரசிகர்கள் மற்றும் தொண்டர்களை சந்தித்து நடிகர் கமல்ஹாசன் வாழ்த்துகளை பெற்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ”பிறந்தநாளன்று இங்கே வந்திருக்கும் பத்திரிக்கையாளர்களுக்கும் என்னுடைய தோழர்களுக்கும் நன்றி. 68 வது பிறந்தநாளில் என்னுடைய வயதின் எண்ணிக்கை எனக்கு கௌரவத்தை சேர்க்காது. மையத் தோழர்கள் செய்திருக்கும் நற்பணிகளின் எண்ணிக்கை தான் கவுரவத்தை சேர்க்கும் என நம்புகிறேன்.
மேடை அமைத்து கொடுக்கிறேன்
பிறந்தநாளை ஒரு நாளில் கொண்டாடுவதில் எனக்கு நம்பிக்கை கிடையாது. வாழ்க்கையை கொண்டாட வேண்டும். என் பிறந்தநாளை காரணமாக வைத்து மக்களுக்கு நற்பணி செய்யும் மேடை அமைத்துக் கொடுக்கிறேன் அவ்வளவு தான். சாலைகளில் ஏற்படும் பள்ளங்களை அரசு தான் முன்வந்து சீர் செய்ய வேண்டும் என கிடையாது.
நாமே அதை முன்வந்து சீர் செய்தாலும் அவை நற்பணி தான். அமெரிக்கா முதல் சின்ன குட்கிராமங்களில் கூட நற்பணிகளை மைய தோழர்கள் செய்து வருகிறார்கள். இது வரை 68 இடங்களில் பல பள்ளிகளுக்கு கழிப்பறைகள் கட்டிக் கொடுத்திருக்கிறோம்.

உங்களை என்னால் திருத்த முடியும்
நாட்டிற்கு கழிப்பறையும் முக்கியம் தான், இடுகாடும் முக்கியம் தான்,மருத்துவமனையும் முக்கியம் தான்” என்றார். மேலும், ”40 ஆண்டுகளாக என் ரசிகர்கள் செய்யும் நற்பணியை அடுத்த கட்ட பயணத்திற்கு என் கட்சித் தோழர்களை தயார் செய்து வைத்திருக்கிறேன்.
பிறந்தநாளை ரசிகர்கள் மற்றும் தோழர்கள் நல்ல முறையில் கொண்டாடி வருகிறார்கள். உங்களை என்னால் திருத்த முடியும். ஆனால், ஆளுநரையோ, மத்திய அரசையோ திருத்த வேண்டும் என்றால் அதற்கு நாளாகும்” என்று கூறினார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்