என்.எல்.சி. விவகாரம் தொடர்பாக அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில் மார்ச் 10 ஆம் தேதி, புவனகிரி தொகுதி அதிமுக எம் எல் ஏ அருண்மொழித்தேவன் சேத்தியாத்தோப்பு பகுதியில் என்.எல்.சி நில கையகப்படுத்துதலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க கட்சிகாரர்களுடன் சென்றார்.
அவரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் வைத்து மாலை 6 மணிக்கு விடுதலை செய்தனர்.
கைது செய்யப்பட்டு மண்டபத்தில் இருந்த எம் எல் ஏ அருண்மொழித் தேவனிடம் மின்னம்பலம். காம் சார்பாக தொடர்பு கொண்டு பேசினோம்.
“நில உடைமையாளர்களை அவரவர் ஊருக்குள்ளே அடைத்து வைத்து போலீஸ் பாதுகாப்புடன் நிலங்களை எடுத்து வருகிறது என் எல் சி நிறுவனம்.
நாங்கள் நிலம் எடுக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆர் &ஆர் ( Resettlement & Rehabilitation ) பாலிசியை நடைமுறைப் படுத்துங்கள் அதன்படி எடுங்கள் என்கிறோம்.
இதே திமுக எதிர்கட்சியாக இருந்தபோது தற்போது வேளாண் துறை அமைச்சராக இருக்கும் எம் ஆர் கே பன்னீர்செல்வம் கருப்பு சட்டையை அணிந்து கொண்டு போராட்டம் செய்தார்.
ஏக்கருக்கு ஒரு கோடி பணமும் வீட்டுக்கு ஒருவருக்கு வேலையும் கேட்டவர், இன்று 25 லட்சம் கொடுப்பதே அதிகம் என்கிறார் இதுதான் திராவிட மாடல் ஆட்சி.
நான் சட்டமன்றத்தில் ஆர் &ஆர் பாலிசி படி குழு அமைத்து நிவாரணம் வழங்க வேண்டும் என்றேன். அப்போது பதில் அளித்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் குழு அமைக்கப்படும் என்றார், ஆனால் இன்று வரையில் எந்த குழுவும் அமைக்காமல் அதிகாரத்தை பயன்படுத்தி மக்களை காவல்துறையால் மிரட்டி நிலம் எடுத்து வருகிறார்கள்” என்கிறார்.
-வணங்காமுடி
மனிதம் போற்றும் ‘அயோத்தி’: சீமான் பாராட்டு!
டான்செட், சீட்டா தேர்வு: ஹால் டிக்கெட் பெறுவது எப்படி?