பொதுத்துறை நிறுவனங்களான எல்ஐசி மற்றும் எஸ்பிஐ வங்கிகள் அதானி குழுமத்தில் முதலீடு செய்ய நிர்ப்பந்தித்ததாக காங்கிரஸ் கட்சி இன்று (பிப்ரவரி 6) நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது.
கடந்த ஜனவரி 24-ஆம் தேதி ஹிண்டன்பெர்க் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் அதானி குழுமம் பங்குசந்தை முதலீடு மோசடியில் ஈடுபட்டதாக தெரிவித்தது.
ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையால் அதானி குழும பங்குகள் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகின்றன.
உலகின் 3-ஆவது பணக்கார பட்டியலில் இருத கெளதம் அதானி, தற்போது 17-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
அதானி குழுமத்தின் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து செபி மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது.
கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதி அதானி குழும முறைகேடுகள் குறித்து காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திரிணாமூல், பாரத் ராஷ்டிரிய சமிதி உள்ளிட்ட கட்சிகள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை ஒத்திவைக்கப்பட்டது.
இந்தநிலையில், பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய நெருங்கிய நண்பர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கில் பொதுத்துறை வங்கிகளான,
எல்ஐசி மற்றும் எஸ்பிஐ வங்கிகளை அதானி குழுமத்தில் முதலீடு செய்ய நிர்ப்பந்தித்ததாகக் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இதனை கண்டித்து காங்கிரஸ் கட்சி இன்று நாடு முழுவதும் எஸ்பிஐ மற்றும் எல்ஐசி அலுவலகங்கள் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது.
டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே காங்கிரஸ் கட்சி எம்.பி-க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்ஐசி அலுவலகம் முன்பாக இன்று காலை 10 மணிக்கு காங்கிரஸ் எஸ்.சி துறை தலைவர் ரஞ்சன் குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
செல்வம்