வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
அதிமுக ஆட்சியில் உணவுத் துறை அமைச்சராக காமராஜ் இருந்தார். 2015 முதல் 2021 வரை தனது அரசு பதவியை தவறாக பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது புகார் எழுந்தது. இந்த புகாரைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது.
அந்த எப்.ஐ.ஆரில், “01.04.2015 முதல் 31.03.2021 வரை உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சராக இருந்த காலத்தில் அரசு பதவியை தவறாக பயன்படுத்தி, பல்வேறு ஊழல் நடவடிக்கையில் காமராஜ் ஈடுபட்டுள்ளார்.
வருமானத்திற்கு அதிகமாக அசையும் மற்றும் அசையா சொத்துக்களை அவர் பெயரிலும், அவரது குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பெயரிலும் என ரூ.58,44,38,252 அளவுக்கு சொத்து சேர்த்துள்ளதாக தெரியவந்தது.
இந்த விரிவான விசாரணையில் கண்டறியப்பட்ட விபரங்களின் அடிப்படையில் காமராஜ், அவரது மகன்கள் இனியன், இன்பன், நண்பர்கள் சந்திரகாசன், கிருஷ்ணமூர்த்தி மற்றும் உதயகுமார் ஆகியோர் மீது 07.07.2022ஆம் தேதி வழக்கு தொடரப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனடிப்படையில் கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தியது.
மன்னார்குடி தெற்கு வீதியிலுள்ள காமராஜ் வீடு, அவரது அக்கா மகன் குமார் வீடு, நன்னிலத்திலுள்ள வீடு, அவரது உறவினரும் வழக்கறிஞருமான உதயகுமார் வீடு, மன்னை கிருஷ்ணமூர்த்தி வீடு என 49 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையை தொடர்ந்து, “8 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சோதனையில் ரூ.41.06 லட்சம் கண்டறியப்பட்டது. அதில் கணக்கில் வராத பணம் ரூ.15,50,000 மற்றும் ஆவணங்கள் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன.
963 சவரன் தங்க நகைகள், சுமார் 23,960 கிராம் வெள்ளி, வங்கி பெட்டக சாவி, ஐ-போன், கணிணி, பென் டிரைவ், ஹார்டு டிஸ்க் மற்றும் ஆவணங்களும் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன” என்று லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்தது.
இந்தசூழலில் இன்று (ஜூலை 11) முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது திருவாரூர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
வருமானத்திற்கு அதிகமாக ரூபாய் 127 கோடியே 49 லட்சம் சொத்து சேர்த்திருப்பதாக 810 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். அதோடு, 18,000 ஆவணங்கள் பெட்டி பெட்டியாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
பிரியா
செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மனு – நீதிபதி கேள்வி!
செந்தில் பாலாஜி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கேவியட் மனு!