தமிழ்நாட்டில் புதிதாக 8 மாவட்டங்கள் உருவாக்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மொத்தம் 38 மாவட்டங்கள் உள்ளன. இதில் நிலப்பரப்பில் பெரிய மாவட்டமாகத் திண்டுக்கல், திருவண்ணாமலை, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பூர், கோவை, ஆகிய மாவட்டங்கள் உள்ளன.
பெரிய மாவட்டங்களின் தலைநகருக்கு செல்ல பயண நேரம் அதிகமாவதால் புதிய மாவட்டங்களை உருவாக்க ஏற்கனவே கோரிக்கைகள் எழுந்தன.
இந்நிலையில் இன்று(ஏப்ரல் 01) சட்டப்பேரவை மானிய கோரிக்கை விவாதத்தின் போது ”திருவண்ணாமலை மாவட்டத்தில், ஆரணி வட்டத்தில் உள்ள பல ஊர்களிலிருந்து மாவட்டத் தலைநகரான திருவண்ணாமலைக்கு செல்வதற்கு நீண்ட நேரம் தேவைப்படுகிறது. இதனால் பொது மக்கள் மிகுந்த துயரத்துக்கு ஆளாகிறார்கள்.
எனவே ஆரணியைத் தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அமைக்கப்படுமா என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன் கேள்வி எழுப்பினார்.
அதேபோல் திமுக கொறடா கோவி செழியன், கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் அமைக்கப்படுமா?” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்,
“தமிழ்நாட்டில் பெரிய மாவட்டங்கள் நிறைய உள்ளன. மாவட்டத்தில் ஒரு இடத்திலிருந்து தலைநகர் நோக்கிச் செல்ல அதிக பயணநேரம் ஆகிறது.
எனவே தங்கள் மாவட்டத்தை பிரிக்க வேண்டும் என்று என்னிடத்திலும் முதலமைச்சரிடத்திலும் பல்வேறு கோரிக்கைகள் வந்துள்ளன. அந்த வகையில் மொத்தம் எட்டு மாவட்டங்களை பிரிக்க வலியுறுத்தி பொதுமக்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அதேபோல் ஆர்டிஓ அலுவலகங்களைப் பிரிக்க வேண்டும் என்றும், தாலுகா அலுவலகங்களைப் பிரிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
புதிய மாவட்டங்களை பிரிப்பதற்கு உண்டான சட்டப்படியான தகுதிகள் அந்தப் பகுதிகளுக்கு இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அதேபோல் மாவட்டங்களை பிரிப்பதற்குத் தேவையான நிதி நிலை இருக்க வேண்டும். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு முதலமைச்சர் முடிவெடுப்பார்” என்றார்.
மோனிஷா
கே. டி. ராகவனை நலம் விசாரித்த நிர்மலா சீதாராமன்