மழைநீர் தேங்கினால் உடனடியாக அகற்ற 741 மோட்டார் பம்புகள் தயார்நிலையில் இருப்பதாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் போஜராஜன் நகருடன் கண்ணப்பன் தெருவை இணைக்கும் வகையில் ரயில்வே சுரங்கப்பாதை அடிக்கல் நாட்டும் பணியினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் இன்று(அக்டோபர் 7) தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்வில் சென்னை மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், சட்டமன்ற உறுப்பினர் ஐடிரீம்ஸ் மூர்த்தி, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, “சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் போஜராஜன் நகருடன் கண்ணப்பன் தெருவை இணைக்கும் ரயில்வே சுரங்கப்பாதை திட்டம் 1989ம் ஆண்டு வடிவமைக்கப்பட்டது.
பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட இந்த திட்டத்தில் ரயில்வே தரப்பில் சுரங்கப்பாதை முடிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஆணைக்கு ஏற்ப ரூ. 13.40 கோடி மதிப்பில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. 18 மாதத்தில் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்.
சென்னையில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள 741 மோட்டார் பாம்புகள் தயார் நிலையில் உள்ளன. மழை பெய்தால் எந்த அளவிலும் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பணிகள் முடியாத இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதுக்காப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் 34 இடங்களில் ரெடிமேட் கான்கிரீட் முறையில் மழைநீர் வடிகால் இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அனைத்து இடங்களிலும் ரெடிமேட் கான்கிரீட் முறையில் அமைப்பதில் தொழில்நுட்ப ரீதியாக சிக்கல் உள்ளது” என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
கலை.ரா