ஆளுநருக்கு எதிராக 50 லட்சம் கையெழுத்து: குடியரசுத் தலைவர் மாளிகையில் ஒப்படைத்த வைகோ

Published On:

| By Kavi

50 lakh signatures against the Governor

தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராக 50 லட்சம் கையெழுத்துகளை பெற்று அதனை குடியரசுத் தலைவர் மாளிகையில் ஒப்படைத்துள்ளார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.

ஆளுநருக்கும், தமிழக அரசுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நடந்து வருகிறது. ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மதிமுகவின் 29ஆவது பொதுக்குழுவில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பிலிருந்து ஆர்.என்.ரவியை அகற்ற கையெழுத்து இயக்கத்தை 20.06.2023 அன்று காலை 11 மணிக்குத் தமிழ்நாடு முழுவதும் தொடங்கி நடத்தப்படும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த இயக்கத்தை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ முதலில் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.

May be an image of 4 people, dais and text
அனைத்து மாவட்டங்களிலும், மாவட்ட செயலாளர்கள் கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி, மக்கள் இயக்கமாக நடத்துவார்கள் என்று மதிமுக தலைமை அறிவித்தது.

அதன்படி கடந்த மூன்று மாதங்களாக பல்வேறு தரப்பினரிடமும் மொத்தம் 50 லட்சம் கையெழுத்துகள் பெறப்பட்டுள்ளன.

இவை அனைத்தும் இன்று (செப்டம்பர் 20) குடியரசுத் தலைவர் மாளிகையில் ஒப்படைக்கப்பட்டன.

இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

“தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி இந்திய அரசியல் சட்டத்திற்கு விரோதமாகவும், தமிழ்நாடு அரசுக்கு விரோதமாகவும் செயல்பட்டு வருவதால், அவரை தமிழ்நாட்டின் ஆளுநர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில், 57 எம்.பி.க்கள் உள்ளிட்ட 50 இலட்சம் பேரிடம் கையெழுத்துக்கள் பெறப்பட்டது.

அவற்றை அட்டைப் பெட்டிகளில் வைத்து, ரயிலில் கொண்டுவந்து, இன்று 20.09.2023 பகல் 12 மணி அளவில் நானும், கணேசமூர்த்தி எம்.பி., அவர்களும் குடியரசுத்தலைவர் மாளிகை அலுவலகத்தில் ஒப்படைத்தோம்.

எங்கள் கோரிக்கை மனு குடியரசுத் தலைவர் பார்வைக்கு அனுப்பப்படும் என்றும் அவர் தருகிற பதிலை உங்களுக்கு நாங்கள் தெரிவிக்கிறோம் என்றும் உறுதி கூறினார்கள்.
கையெழுத்திட்ட அரசியல் கட்சிகளின் முன்னணித் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பல்வேறு தரப்பில் உள்ள பொதுமக்கள் அனைவருக்கும் இந்த செய்தியை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

இதற்காகப் பாடுபட்ட மதிமுக மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் உள்ள நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக வேலூரில் நடந்த இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின் ஆளுநருக்கு எதிராக ஒரு கோடி கையெழுத்து பெறப்படும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா

அசத்தலான கேமரா தரத்தில் VIVO V29 மற்றும் VIVO V29 PRO 

பூஜ்ஜியமாகக் குறைக்கப்பட்ட நீட் கட் ஆப்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel