பாமக 36ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கவுள்ள நிலையில், விக்கிரவாண்டி தேர்தல் வெற்றியே நீங்கள் எனக்கு தரும் பரிசு என்று தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார் ராமதாஸ்
வரும் ஜூலை 16ஆம் தேதி பாமக 35 ஆண்டுகளை நிறைவு செய்து, 36ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கவுள்ளது.
இதுதொடர்பாக கட்சி நிர்வாகிகளுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று (ஜூலை 2) கடிதம் எழுதியுள்ளார்.
அதில், “
பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்டு 35 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன என்ற உண்மையை சொல்லி முடிக்கும் போதே, இந்த 35 ஆண்டுகளில் ஓர் அரசியல் கட்சியாக என்னென்ன சாதித்தோம்? என்ற வினாவும் எழும். அது இயற்கை தான். அந்த வினாவுக்கு விடையளிக்கும் போது, 35 ஆண்டுகள் ஆகியும் இன்னும் ஆட்சிப் பொறுப்பை அடைய முடியவில்லை என்ற நமது இயலாமையை ஒப்புக்கொள்ளும் போது மனம் வலிக்கிறது. எதனால் அது சாத்தியமாகவில்லை என்ற வினா எனது மனதில் நிறைகிறது.
அதேநேரத்தில் தமிழ்நாட்டு மக்களுக்காகவும், சமூகநீதிக்காகவும் நாம் ஆற்றிய பணிகள் தான் நமது மனதிற்கு நிறைவைத் தருகின்றன. ஆட்சியில் இருந்த, ஆட்சியில் இருக்கும் கட்சிகளால் கூட சாத்தியமற்ற பல மக்கள்நலப் பணிகளை பாட்டாளி மக்கள் கட்சி செய்திருக்கிறது என்ற உண்மையை நமது எதிரிகளால் கூட மறுக்க முடியாது. தமிழ்நாட்டு அரசியலின் திசையை தீர்மானிக்கும் சக்தியாக பா.ம.க.வே திகழ்கிறது.
வன்னியர் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக 20% இட ஒதுக்கீடு, 10.50% வன்னியர் இடஓதுக்கீடு, 3.50% இஸ்லாமியர் இட ஒதுக்கீடு, 3% அருந்ததியர் இட ஒதுக்கீடு என தமிழ்நாட்டளவில் 4 இட ஒதுக்கீடுகள், தேசிய அளவில் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு, மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய தொகுப்பு இடங்களில் பட்டியலினத்தவருக்கு 15%, பழங்குடியினருக்கு 7.50% இட ஒதுக்கீடு என மொத்தம் 6 இட ஒதுக்கீடுகளை வென்றெடுத்தது நாம் தான்.
பாமக 36ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்தத் தருணத்தில் உங்களை நான் கேட்டுக் கொள்வதெல்லாம், ‘‘மக்களை சந்தியுங்கள், அவர்களுடன் இணைந்து வாழுங்கள், அவர்களின் தேவைகளை அறியுங்கள், அவர்கள் கேட்காமலேயே அவர்களுக்காக போராடி கோரிக்கைகளை நிறைவேற்றித் தாருங்கள்’’ என்பதைத் தான்.
வரும், ஜூலை 16ஆம் தேதி பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்ட நாள்; ஜூலை 20ஆம் தேதி வன்னியர் சங்கம் தொடங்கப்பட்ட நாள்; ஜூலை 25ஆம் தேதி பசுமைத்தாயகம் நாள். இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் இன்னொரு நாள் கூடுதலாக சேர்ந்திருக்கிறது. அந்த நாள் ஜூலை 10ஆம் நாள். ஆம்… அன்று தான் வன்னியர் இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் காவல்துறையினரின் துப்பாக்கி குண்டுகளுக்கு தங்களின் இன்னுயிரை ஈந்த மண்ணான விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
வழக்கமாக ஜூலை மாதத்தில் நாம் கொண்டாடும் 3 நாட்கள் எவ்வளவு முக்கியமானவையோ, அதே அளவுக்கு ஜூலை 10ஆம் நாளும் மிகவும் முக்கியம். இன்னும் கேட்டால் ஜூலை 10ஆம் நாள் நடைபெறும் இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியை வெற்றி பெறச் செய்வது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் 36ஆம் ஆண்டு தொடக்க விழாவுக்கு நீங்கள் எனக்கு வழங்கும் மறக்க முடியாத பரிசாக இருக்கும். அதற்காக நான் காத்திருக்கிறேன்.
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் நாம் வெற்றி பெறுவது மிகவும் எளிதான ஒன்று தான். மக்களவைத் தேர்தலில் பணத்தை வாரி இறைத்து வெற்றி பெற்று விட்ட மிதப்பில் ஆளும் திமுக இருந்தாலும் கூட களநிலைமை அவர்களுக்கு எதிராகத் தான் இருக்கிறது.
விக்கிரவாண்டியில் இருந்து கூப்பிடும் தொலைவில் உள்ள கள்ளக்குறிச்சியில் விற்பனை செய்யப்பட்ட நச்சு சாராயத்தைக் குடித்து 65 பேர் உயிரிழந்தது, சமூகத்தின் அடித்தட்டில் வாழும் வன்னிய மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று அறிவித்தது.
சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் அனுபவித்து வரும் துயரங்களைத் தீர்க்க நடவடிக்கை எடுக்காதது போன்றவற்றால் விக்கிரவாண்டி தொகுதி மக்கள் மத்தியில் எல்லையில்லா கோபமும், கொந்தளிப்பும் நிலவிக் கொண்டிருக்கிறது. அதை பாட்டாளிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
HBD Archana சின்னத்திரை to வெள்ளித்திரை: விஜே அர்ச்சனாவின் வெற்றிப் பாதை!
எனது பேச்சை மீண்டும் சேருங்கள் : ஓம்.பிர்லாவுக்கு ராகுல் கடிதம்!