காயமடைந்த மீனவருக்கு ரூ. 2 லட்சம் நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு!

Published On:

| By Kalai

இந்திய கடற்படையால் சுடப்பட்டு காயமடைந்துள்ள தமிழக மீனவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.

கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மயிலாடுதுறையைச் சேர்ந்த மீனவர்கள் மீது இந்திய கடற்படை இன்று(அக்டோபர் 21) துப்பாக்கிச்சூடு நடத்தியது.

இதில் வீரவேல் என்ற மீனவரின் கால் மற்றும் இடுப்பு பகுதியில் குண்டு பாய்ந்தது. அவருக்கு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்திய கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கு தமிழக அரசு கண்டனம் தெரிவித்த நிலையில், காயமடைந்த மீனவருக்கு முதலமைச்சர் 2 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மயிலாடுதுறையைச் சேர்ந்த மீனவர் வீரவேல், இந்திய கடற்படையினரால் சுடப்பட்டதில் பலத்த காயமடைந்தார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

உடனடியாக வீரவேல் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சிகிச்சை பெற்று வரும் மீனவர் வீரவேலுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன். அதோடு அவருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 2 லட்சமும் வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

கலை.ரா

‘வெள்ளை சட்ட போட்டா அரசியல்வாதியா?’: விக்ரமன் அசீமுக்கு இடையே முற்றிய வாக்குவாதம்!

ஆக்டிவ் அரசியலுக்குத் திரும்பும் ஆளுநர்  தமிழிசை:   வழிகாட்டும் பேபிராணி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share