அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் டங்க்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு, 2026ல் மீண்டும் எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்வராக்குவோம் என 16 தீர்மானங்கள் இன்று (டிசம்பர் 15) ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
தமிழக எதிர்க்கட்சியான அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் கட்சியின் அவை தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு திருமண மண்டபத்தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.
பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி. உதயகுமார், ஜெயக்குமார், தனபால், பொன்னையன், தங்கமணி, நத்தம் விஸ்வநாதன், ராஜேந்திர பாலாஜி, விஜய பாஸ்கர், பெஞ்சமின், வளர்மதி, வைகைச் செல்வன், செம்மலை, சி.வி.சண்முகம், தம்பிதுரை, செல்லூர் ராஜூ, தளவாய் சுந்தரம், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தாமோதரன், பால கங்கா, இசக்கி சுப்பையா, ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் மேடையில் அமர்ந்துள்ளனர்.
மேலும் அனைத்து அதிமுக எம்.எல்.ஏ, எம்.பிக்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் வந்திருந்த கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவர் முன்னிலையிலும் மொத்தம் 16 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
அதன் விவரம்!
1.அதிமுக நிறுவனத் தலைவர் எம்.ஜி. ஆர். மனைவியும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான ஜானகி ராமச்சந்திரன் நூற்றாண்டு விழாவை பெருமை பொங்க நடத்திக் காட்டிய, கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டும், நன்றியும்.
2. தமிழ் நாட்டில் மிகப் பெரிய பேரழிவை ‘ஃபெஞ்சல்’ புயல் ஏற்படுத்திய நிலையில் அதை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை, பாதுகாப்பு நடவடிக்கை, மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கை எதையும் செய்யாமல், பேரிடர் காலங்களில் மக்களுக்கான குறைந்தபட்சம் உணவு, உறைவிடம், குடிநீர். சுகாதார வசதி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளைக்கூட ஒழுங்காக முறையாக நிறைவேற்றாத திமுக அரசுக்கு கடும் கண்டனம்.
3. திமுக ஆட்சியில் சீரழிந்து வரும் சட்டம்-ஒழுங்கு போதைப் பொருட்கள் நடமாட்டம்; ஏழை எளிய நடுத்தர மக்களை வாட்டி வதைக்கும் விலைவாசி உயர்வு, மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு வீட்டு வரி உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு பத்திரப் பதிவுக் கட்டண உயர்வு முத்திரைத் தாள் கட்டண உயர்வு, வழிகாட்டி மதிப்பீடு உயர்வு என்று தமிழ் நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை நசுக்கி வரும் நிர்வாகத் திறமையற்ற ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கு கடும் கண்டனம்.
4. திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமலும் அரசு ஊழியர்கள் கோரி வரும் பழைய ஓய்வூதியத் திட்டம் ஆசிரியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோரின் ஊதிய முரண்பாடு, பணி நிரந்தரம் ஆகியவற்றை நிறைவேற்றாமலும், விவசாயிகள், தொழிலாளர்கள், மிவைர்கள் நெசவாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாமலும் இருக்கும் திமுக அரசுக்கு கண்டனம்.
5. டங்ஸ்டன் சுரங்கம் தமிழகத்தில் மேலூருக்கு அருகில் கொண்டுவர மத்திய அரசு ஒப்பந்தப் புள்ளி கோரியபோதே 10 மாதகாலம் அவகாசம் இருந்த நிலையிலும் அவற்றைத் தடுக்கத் தவறிய ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கும்; நாடாளுமன்றத்தில் இச்சட்டம் கொண்டுவரும்போதும், அதற்குப் பிறகும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் போதிய அழுத்தம் கொடுத்து தடுக்கத் தவறிவிட்ட திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் கடும் கண்டனம். தமிழகத்தில் மதுரை மாவட்டம், மேலூர் அருகில் டங்ஸ்டன் சுரங்கம் அமைவதை மத்திய அரசு கைவிடுமாறு வலியுறுத்தல்.
6. i) உலகப் பொதுமறையாகவும், இந்தியாவுக்கு வாழ்வியல் வழிகாட்டியாகவும், தமிழகத்திற்கு காலம் வழங்கிய கொடையாகவும் திகழ்கின்ற திருக்குறளை தேசிய நூலாக அறிவித்திட மத்திய அரசை வலியுறுத்துதல் !
ii) சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் இடம்பெற வலியுறுத்தல்!
iii) இந்தித் திணிப்புக்கு எதிர்ப்பு – மத்திய அரசால் இயற்றப்படும் சட்டங்களின் பெயர்களுக்கு இந்தியில் பெயர் வைப்பதைக் கைவிட்டு, ஆங்கிலத்திலேயே தொடர மத்திய அரசுக்கு வலியுறுத்தல்!
7. மக்களுக்கான திட்டங்களைத் தீட்டி அவைகளை செயல்படுத்துவதற்கு நிதி ஒதுக்காமல் திட்டமிடல் எதுவுமின்றி விளம்பரத்திற்காக ஃபார்முலா 4′ கார் பந்தயம் நடத்துதல்; வரைமுறையின்றி சிலைகள் வைத்தல்; பூங்காக்கள் அமைத்தல்; பேனா நினைவுச் சின்னம்; பலகோடி ரூபாய் மதிப்பீட்டில் பன்னாட்டு கூட்ட அரங்கம் கட்டுதல் போன்றவற்றிற்கு முன்னுரிமை கொடுத்து, ஆடம்பர செலவு செய்து, மக்கள் நலன்களை பின்னுக்குத் தள்ளி அரசு நிதியை வீணடிக்கும் திமுக அரசுக்கு கடும் கண்டனம்!
8. கழக ஆட்சியின்போது குடிமராமத்துத் திட்டம், தடுப்பணைகள் திட்டம், அணைகள், ஏரிகள், குளங்கள் மற்றும் நீர்நிலைகளை ஆழப்படுத்தி நீரை சேமிக்கும் திட்டம் ஆகியவை நிறைவேற்றப்பட்டதை திமுக அரசு தொடர்ந்து செயல்படுத்தத் தவறியதற்கு கண்டனம்.
9. தமிழ் நாடு தண்ணீர் பற்றாக்குறை கொண்ட மாநிலம், அதனால், விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்காக அண்டை மாநிலங்களை நம்பியிருக்க வேண்டியுள்ளது. கழக ஆட்சியில் தொலை நோக்குப் பார்வையோடு கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டம் மற்றும் பரம்பிக்குளம் ஆழியாறு, பாண்டியாறு- புன்னம்புழா ஆகிய திட்டங்களையும், தொடர் நடவடிக்கை எடுத்து செயல்படுத்தத் தவறிய திமுக அரசுக்குக் கண்டனம்!
10. நீட் தேர்வு ரத்து குறித்து கபட நாடகம் ஆடிக்கொண்டிருக்கும் திமுக அரசுக்கு கடும் கண்டனம்.
11. வாக்காளர்கள் சேர்த்தல், நீக்குதல் போன்றவற்றில் பல்வேறு குளறுபடிகள் நிலவுவதை சரிசெய்திடவும்; தேர்தல் நியாயமாக நடத்தப்படவும் இந்திய தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தல்.
12. கல்வி பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் அனைவருக்கும் சம உரிமையையும், சம வாய்ப்புகளையும் வழங்கிடும் வகையில், சாதிவாரி கணக்கெடுப்பினை எடுக்க திமுக அரசை வலியுறுத்தல்.
13. i) சிறுபான்மையினர் நலன் காக்கும் வகையில், அதிமுக ஆட்சிக் காலங்களில் நடைமுறைப்படுத்திய திட்டங்களை முடக்கிவிடாமல் தொடர்ந்து செயல்படுத்தி, சிறுபான்மையினர் நலன் காக்கப்பட வேண்டும் என்று திமுக அரசுக்கு வலியுறுத்தல்.
ii) 2021, சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது, திமுக ஆட்சிக்கு வந்தால் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துவிட்டு, இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்வதற்கு எவ்வித முயற்சியையும் மேற்கொள்ளாத, திமுக அரசைக் கண்டிக்கின்றோம்.
iii) பட்டியலின மக்களின் உரிமைகளைக் காப்பாற்றவும், பாதுகாக்கவும் தவறிய திமுக அரசுக்கு கண்டனம்!
14. மாநிலங்களின் உரிமையைப் பறிக்கும் வகையில், மாநிலப் பட்டியலில் இடம்பெற்றிருந்த கல்வியை, நாட்டில் அவசர நிலை அமலில் இருந்த காலகட்டத்தில் பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டதை, மீண்டும் மாநிலப் பட்டியலில் சேர்க்கும் வகையில், அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசை வலியுறுத்தல்.
15. தமிழ் நாட்டிற்கான நிதிப் பகிர்வினை பாரபட்சமில்லாமல் வழங்கிட மத்திய அரசை வலியுறுத்தல்!
16. அதிமுக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகிய இருபெரும் தலைவர்களின் வழியிலே செயல்பட்டு, ஆளுமைத் திறன் மிக்க அரசியல் தலைவராகத் திகழும் கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை 2026-ல் மீண்டும் தமிழ் நாடு முதலமைச்சராக்குவோம் என சூளுரை ஏற்போம்” என கூட்டத்தில் மொத்தம் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 நியூஸ் : அதிமுக பொதுக்குழு கூட்டம் முதல் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி வரை!
கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் – பிரியாணி சமைக்கப் போறீங்களா? இப்படிச் செய்து பாருங்க!