நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இருந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 23 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், தற்போது பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
கடந்த ஜூலை 26 ஆம் தேதி நாடாளுமன்ற மாநிலங்களவையில் விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி வரி உயர்வு, பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு விவகாரங்களை வலியுறுத்தி திமுக, திரிணாமுல் காங்கிரஸ், தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள், சபாநாயகரின் இருக்கையை சூழ்ந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதனால் திமுக எம்பிக்கள் உட்பட 19 எம்பிக்கள் இந்த வாரம் முழுவதும் அவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவதாக மாநிலங்களவைத் தலைவர் உத்தரவிட்டார்.
இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் பிரதமர் மோடியை ‘ராஜா’ என்று குறிப்பிட்டதுடன் நாங்கள் மக்களின் குரலாக இருக்கிறோம். அவர்களின் பிரச்சினைகளுக்காக தொடர்ந்து போராடுவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் பிரதமரிடம் 10 கேள்விகளை கேட்டுள்ளார். அவை:
1. 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இன்று வேலையின்மை ஏன்? ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி என்ன ஆனது?
2. தயிர், தானியங்கள் போன்ற அன்றாட உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டியை விதித்து மக்களிடம் இருந்து உழைப்பை ஏன் பிடுங்குகிறீர்கள்?
3. சமையல் எண்ணெய், பெட்ரோல்-டீசல் மற்றும் சிலிண்டர்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. பொதுமக்களுக்கு எப்போது நிவாரணம் கிடைக்கும்?
4. அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 80 ஐ தாண்டியது ஏன்?
5. 2 ஆண்டுகளாக ராணுவத்தில் ஒரு ஆள்சேர்ப்பு கூட செய்யாமல், தற்போது ‘அக்னிபத்’ திட்டத்தை’ அரசு கொண்டு வந்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் 4 வருட ஒப்பந்தத்தில் இளைஞர்கள் ‘அக்னிவீரன்’ ஆக வேண்டிய கட்டாயம் ஏன்?
6. லடாக் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் சீன ராணுவம் நமது எல்லைக்குள் நுழைந்துள்ளது. ஏன் மௌனமாக இருக்கிறீர்கள், என்ன செய்கிறீர்கள்?
7. பயிர் காப்பீடு செய்யப்பட்ட காப்பீட்டு நிறுவனங்கள் ரூ. 40,000 கோடி, ஆனால் 2022க்குள் ‘விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம்’ என்ற அதன் வாக்குறுதியில் மவுனம் காத்தது ஏன்?
8. சரியான, குறைந்தபட்ச ஆதரவு விலை என்ற விவசாயியின் வாக்குறுதி என்ன ஆனது? மேலும் விவசாயிகள் இயக்கத்தில் வீரமரணம் அடைந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு என்ன ஆனது?
9. மூத்த குடிமக்களுக்கான ரயில் டிக்கெட்டுகளில் 50% தள்ளுபடி ஏன் நிறுத்தப்பட்டது? முதியோர்களுக்கு சலுகை வழங்க பணம் இல்லாதது ஏன்?
10. மத்திய அரசின் மீதான கடன் 2014ல் 56 லட்சம் கோடியாக இருந்தது.இப்போது 139 லட்சம் கோடியாக அதிகரித்து, மார்ச் 2023க்குள் 156 லட்சம் கோடியாக இருக்கும். ஏன் நாட்டை கடனில் மூழ்கடிக்கிறீர்கள்?
இவ்வாறு அடுக்கடுக்காக 10 கேள்விகளை எழுப்பியுள்ள ராகுல் காந்தி, இந்த அனைத்து கேள்விகளுக்கும் பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மோனிஷா