முதல்வர் ஸ்டாலினை சந்தித்த போது இந்த ஆண்டே வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கவேண்டுமென பேசியதாக அன்புமணி ராமதாஸ் கூறினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (பிப்ரவரி 18) சந்தித்து பேசினார்.
இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், எம்.பி.சி. பிரிவில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு தொடர்பாக முதல்வரைச் சந்தித்து பேசினோம்.
எம்.பி.சியை மூன்றாகப் பிரித்து வன்னியர்களுக்கு 10.5 இட ஒதுக்கீடு வழங்கியதை ரத்து செய்து கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. சரியான முறையில் தரவுகள் இல்லை என்று கூறியது.
இதையடுத்து தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தைத் தமிழக அரசு திருத்தியமைத்தது. இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் எம்.பி.சி இட ஒதுக்கீடு சம்பந்தமாக உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு ஏற்ப அரசாங்கம் அரசாணை வெளியிட்டது.
அதில் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், இன்னும் மூன்று மாதத்தில் இந்த 20 விழுக்காடு தரவுகளைச் சேகரித்து தமிழக அரசுக்குக் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது.
மூன்று மாதத்தில் ஒரு மாதம் கடந்திருக்கிறது. இந்த ஆண்டிலேயே கல்வியிலோ, வேலைவாய்ப்பிலோ அட்மிஷனுக்கு ஏதுவாக இட ஒதுக்கீட்டைக் கொண்டு வர வேண்டும் என்று முதல்வரிடம் கேட்டுக்கொண்டிருக்கிறோம்.
தமிழ்நாட்டில் தலித், வன்னியர் சமுதாயங்கள் பின் தங்கி இருக்கிறது. இந்த சமுகத்தினர் தமிழகத்தில் 40 விழுக்காட்டினர் இருக்கின்றனர்.
இவர்கள் முன்னேறினால் தமிழகம் முன்னேறும். இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் கிடையாது” என்றார்.
நீர் மேலாண்மை பிரச்சினை, போதைப் பொருள் பயன்பாட்டைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகியவை பற்றியும் முதல்வரிடம் பேசினோம். அதைத் தவிர வேறு எதுவும் அரசியல் பேசவில்லை” என்றார்.
பிரியா