வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை செயல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று(ஏப்ரல் 13) தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகின்றது. இன்று (ஏப்ரல் 13) சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதத்தின் போது பாமக எம்.எல்.ஏ ஜி.கே. மணி வன்னியர்களுக்கான 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
அப்போது பேசிய சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, “வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக அமைக்கப்பட்ட ஆணையத்திற்கு 1 மாத காலம் அவகாசம் வழங்கினால் போதாதா, 6 மாத காலம் அவகாசம் வழங்கியது ஏன்?” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு விளக்கம் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ”10.5% இட ஒதுக்கீடு என்பது எந்த நேரத்தில் கொண்டு வரப்பட்டது” என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், “வன்னியர் இட ஒதுக்கீடு கடந்த ஆட்சிக் காலத்தில் தேர்தல் தேதி அறிவிக்கும் போது அவசர அவசரமாக கொண்டு வரப்பட்டது.
எனவே அதனை ஆய்வு செய்ய உச்சநீதிமன்ற பரிந்துரை அடிப்படையில் தான் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
ஆணையம் கேட்டுக் கொண்டதன் அடிப்படையிலும், உரியக் காலத்திற்குள் பணியை முடிக்காததாலும் தான் 6 மாதம் காலம் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வன்னியருக்கான இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று பேசினார்.
மோனிஷா
பஞ்சாபில் துப்பாக்கிச் சூடு: தமிழக வீரர்கள் வீரமரணம்!
ஒரே குடையில் எதிர்க்கட்சிகள்: பிரதமர் பதவியைக் குறிவைக்கும் நிதிஷ்குமார்?
பத்திரப் பதிவு மோசடி: அறப்போர் புகாருக்கு நயினார் நாகேந்திரன் பதில்!