அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்குகளை வேறு நீதிபதி விசாரணைக்கு மாற்றக் கோரிய மனுவில், அதை மாற்றுவதில் உடன்பாடு இல்லை என உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு தொடர்பான ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கை உயர் நீதிமன்றமே விசாரிக்க வேண்டும் எனவும், வழக்கை 2 வாரத்தில் விசாரித்து முடிக்க வேண்டுமெனவும் தனி நீதிபதிக்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி இந்த வழக்கு நாளை (ஆகஸ்ட் 4) நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன்பு விசாரணைக்கு வர இருக்கிறது.
ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மனு
இந்த நிலையில் இன்று காலை (ஆகஸ்ட் 3) அதிமுக பொதுக்குழு வழக்குகளை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டுமென பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து என்பவர் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரிக்கு மனு அளித்திருந்தார். அவர் அளித்த மனுவில், “நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவில், ஜனநாயகத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பம்தான் மேலோங்கி இருக்கும். அவர்கள் விருப்பத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது.
கட்சி உறுப்பினர்களின் நம்பிக்கையை பெற முடியாதவர்கள் நீதிமன்றங்களை ஒரு கருவியாக தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துவதாக மனுதாரர்களை குற்றம்சாட்டியுள்ளார். மற்றொரு மனுதாரரான ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் கட்சியின் பொதுக்குழுவை அணுகாமல், ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை நாடுவதாகவும், நீதிமன்றத்தின் மூலம் சாதிக்க முயற்சிப்பதாகவும் தெரிவித்திருப்பது வழக்கிற்கு சம்பந்தமில்லாத கருத்துகள்.
எனவே அதிமுக பொதுக்குழு வழக்கை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரிக்கக் கூடாது. வேறொரு நீதிபதியிடம் விசாரணைக்கு மாற்ற வேண்டும்” என்று அதில் தெரிவித்திருந்தார்.
அதுபோல் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத்தும், தலைமை நீதிபதி அமர்வு முன்பு ஆஜராகி, இந்த வழக்கை வேறொரு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை ஒரு முறையீடாக வைத்தார்.
இதைக் கேட்ட தலைமை நீதிபதி இன்று (ஆகஸ்ட் 3), “அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்குகளை வேறு அமர்வுக்கு மாற்றுவதில் உடன்பாடு இல்லை” என்று பதிலளித்திருக்கிறார்.
ஜெ.பிரகாஷ்