மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள மதுரை மாநாட்டு மையத்தில் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது.இந்த நிகழ்ச்சியில் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நேற்று (செப்டம்பர் 23) கலந்து கொண்டர்.
பின்னர், விழாப்பேருரையாற்றிய அவர், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திராவிட இயக்கத்தின் அடிப்படை கொள்கைகளான சுயமரியாதை, சமூகநீதி, சம உரிமை, எல்லோர்க்கும் கல்வி, எல்லோர்க்கும் சம வாய்ப்பு என்ற அடிப்படையில் மக்கள் நலனை தலையாய கடமையாகக் கொண்டு அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
சென்னையில் மட்டுமல்லாது தமிழகத்தின் பிற பகுதிகளிலும் அரசு நிதியுதவியுடன் புத்தகத் திருவிழாக்கள் நடத்திட வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் மூலம் நடத்தப்பட்டு வந்த புத்தகக் கண்காட்சிகள் அரசு அமைப்புகளின் ஒருங்கிணைப்போடு அரசு நிதியுதவியுடள் சிறப்பாக நடத்தப்படுகிறது.
மதுரை மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக நடத்தப்படும் இந்த புத்தகத் திருவிழா குறுகிய காலத்தில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை ஒருங்கிணைத்து மேற்கொண்ட அனைத்து அலுவலர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

புத்தக வாசிப்பு என்பது மிக அற்புதமான பழக்கம். பள்ளி, கல்லூரி காலங்களில் வகுப்பறைகளை கட்டடித்து இருந்தாலும், புத்தக வாசிப்பு பழக்கத்தை கைவிட்டதே இல்லை . இரண்டு புத்தகங்களையாவது படித்து விடுவேன். கடந்த முறை புத்தக கண்காட்சி நடைபெற்ற போது 50க்கும் மேற்பட்ட புத்தகங்களை விரும்பி வாங்கினேன். மறுபடியும் இந்த கண்காட்சியினை விரிவாக பார்வையிட்டு புத்தகங்களை வாங்கிட ஆவலாக உள்ளேன் என கலகலப்பாக பேசினார்.
மேலும், பாடப்புத்தகங்களை தாண்டி பிற துறை சார்ந்த நூல்களை வாசிப்பதன் மூலம் உலக நடப்புகள், அரசியல் நிகழ்வுகள், பொருளாதார மாற்றங்கள் உள்ளிட்ட அனைத்து விதமான அரிய தகவல்களை கற்றறிந்து பயன்பெற முடியும்.

அந்த வகையில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக நடத்தப்படும் இந்த புத்தகத் திருவிழாவை பொதுமக்கள், இளைஞர்கள், மாணவ, மாணவியர்கள் அனைவரும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, எழுத்தாளர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், மாவட்ட ஆட்சியர் எஸ் அனீஷ் சேகர் , மாநகராட்சி ஆணையாளர், தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மு. பூமிநாதன், மாதுரை மாநகர மேயர். இந்திராணி பொன் வசந்த், துணை மேயர் நாகராஜன் மற்றும் அதிகாரிகள், வாசகர்கள்,பதிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
பாலாற்றில் மீண்டும் கைவைக்கும் ஜெகன்: தமிழக விவசாயிகள் அதிர்ச்சி!
இந்தியா-ஆஸ்திரேலியா டி 20 போட்டி: தாமதம் ஏன்?