“ரஷ்யா தனது இறையாண்மையையும், ஆன்மிக மதிப்பையும் காத்துக் கொள்ளவே போராடி வருகிறது. இதனால்தான் இந்த ரஷ்ய உக்ரைன் போரே ஏற்பட்டது” என்று உக்ரைன் – ரஷ்யா போர் குறித்து ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
கடந்த 2022 பிப்ரவரி மாதம் ரஷ்யா, தனது அண்டை நாடான உக்ரைனை ‘சிறப்பு ராணுவ நடவடிக்கை ‘ எனும் பெயரில் ஆக்ரமித்தது. இதை எதிர்த்து, அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் துணையுடன் உக்ரைன் போரிட்டு வருகிறது.
இரு தரப்பிலும் எண்ணிலடங்கா உயிர் பலிகளும், பெருமளவு பொருள் சேதங்களும் ஏற்பட்டும் போர் முடிவுக்கு வராமல் 580 நாட்களுக்கும் மேலாக தொடர்கிறது.
கடந்த ஆண்டு, உக்ரைனின் டோனெட்ஸ்க் (Donetsk), லுஹான்ஸ்க் (Luhansk), சப்போரிழியா (Zaporizhzhia) மற்றும் கெர்சன் (Kherson) ஆகிய பகுதிகளை ரஷ்யா தங்கள் நாட்டுடன் ஒவ்வொன்றாக இணைத்துக் கொண்டது.
இணைக்கப்பட்ட இந்த நான்கு பகுதிகளிலும் சில நாட்களுக்கு முன் ரஷ்யாவின் மத்திய தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தி, அத்தேர்தலில் ரஷ்ய பிரதிநிதிகள் வெற்றி பெற்றதாகவும் அறிவித்தது.
ஆனால், உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகள் இந்தத் தேர்தலை ஒப்புக் கொள்ளாமல் புறக்கணித்தன.
இந்தத் தேர்தல் வெற்றியைக் கொண்டாடும் விதமாக நாட்டு மக்களுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வீடியோ மூலமாக உரையாற்றினார்.
இந்த உரை அரசாங்கத்தின் அதிகாரபூர்வ வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் அவர், “ரஷ்யா தனது இறையாண்மையையும், ஆன்மிக மதிப்பையும் காத்துக் கொள்ளவே போராடி வருகிறது. இதனால்தான் இந்த ரஷ்ய – உக்ரைன் போரே ஏற்பட்டது.
நாம் நமது தாயகத்துக்காக போராடுகிறோம்; நமது ஒற்றுமைக்காகவும், வெற்றிக்காகவும் நாம் சண்டையிடுகிறோம். இதில் எந்த சர்வதேச சட்டங்களோ, வழிமுறைகளோ மீறப்படவில்லை.
ரஷியாவுடன் தற்போது இணைக்கப்பட்ட உக்ரைனின் நான்கு பகுதிகளைச் சேர்ந்த மக்களும் ரஷ்யாவுடன் இணையவே விரும்பினார்கள்” என்று புதின் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, உக்ரைன் தலைநகர் கீவ் சென்றுள்ள நேட்டோ (NATO) கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டால்டன்பர்க், “ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைன் மெதுவாக முன்னேறி வருகிறது.
உக்ரைன் மீண்டும் கையகப்படுத்தும் ஒவ்வொரு மீட்டர் இடமும் ரஷ்யா இழக்கும் இடமாகக் கருத வேண்டும்” என எச்சரித்துள்ளார்.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இன்று முதல் குடிநீர் வரி கட்டணங்களை ரொக்கமாகச் செலுத்த முடியாது!