மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நூலகத்தின் கட்டுமானப் பணிகளை நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று (ஜூலை 15) நேரில் பார்வையிட்டார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு, “நான்கு வழி சாலைகளில் மட்டுமே சுங்கச் சாவடிகள் இருக்க வேண்டும் என்பது விதி. ஆனால் தமிழகத்தில் இரு வழி சாலைகளிலும் சுங்கச் சாவடிகள் உள்ளன. பிற மாநிலங்களை விடவும் தமிழ்நாட்டில் அதிக அளவில் சுங்கச் சாவடிகள் உள்ளன. இவற்றை குறைக்க ஒன்றிய பாஜக அரசுக்கும், மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கும் கடிதங்கள் எழுதி வருகிறேன்.
கடந்த ஆண்டு எழுதிய கடிதத்தின் விளைவாகவே தேசிய நெடுஞ்சாலைகளில் 60 கி.மீ.க்கு ஒரு சுங்கச்சாவடி மட்டுமே இருக்க வேண்டும் என்ற நிலை உருவானது” என்று தெரிவித்தார்.
மேலும் தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை மூலம் சுங்கச் சாவடிகளை கணக்கெடுத்து வருவதாகவும் இவற்றில் அகற்றப்பட வேண்டிய சுங்கச் சாவடிகள் குறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுத உள்ளதாகவும் கூறியுள்ளார்.