வரதட்சணை கேட்டு மனைவியை கொடூரமாக தாக்கிய வழக்கு தொடர்பாக நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவலர் பூபாலன், இன்று (ஜூலை 19) கைது செய்யப்பட்டார். Policeman Bhoopalan arrested for dowry case
மதுரை அப்பன்திருப்பதி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார் பூபாலன் (வயது 38). இவருக்கும் தேனியை சேர்ந்த தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்த பெண்ணுக்கும் கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
பூபாலனின் தந்தை செந்தில்குமார் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், தனது கணவர் மற்றும் மாமனார் ஆகியோர் தினமும் கூடுதல் வரதட்சணை கேட்டு தன்னை கொடுமை செய்வதாக அப்பெண் புகார் தெரிவித்திருந்தார்.
மேலும் பூபாலன் தாக்கியதில் காயம் அடைந்த அந்த ஆசிரியை, மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதுதொடர்பாக ஆசிரியையின் குடும்பத்தினர் அப்பன் திருப்பதி போலீசில் அளித்த புகாரின்பேரில் கணவர் பூபாலன், மாமனார் செந்தில்குமார், மாமியார் விஜயா, நாத்தனார் அனிதா உள்ளிட்ட 4 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே, வரதட்சணை கேட்டு மனைவியை கொடூரமாக தாக்கியது குறித்து, தனது சகோதரியிடம் காவலர் பூபாலன் சிரித்து சிரித்து பேசுவது போன்ற ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து பூபாலன் மீது கூறிய குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதாக கருதி அவரை சஸ்பெண்ட் செய்து மதுரை சரக டி.ஐ.ஜி. அபினவ் குமார் நேற்று உத்தரவிட்டார்.
இதே போல் வரதட்சணை கொடுமை புகாரில் அப்பெண்ணின் மாமனாரான இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தலைமை காவலர் பூபாலனை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
