கடலூரில் தப்பிக்க முயன்ற கஞ்சா வியாபாரியை போலீசார் சுட்டு பிடித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனைக்கு எதிராக காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
எனினும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் புழக்கம் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பாலியல் வன்கொடுமை, கொலை, கொள்ளை என குற்ற செயல்களும் அதிகரித்து வருகின்றன.
இந்த சூழலில் கடலூரில் கஞ்சா வியாபாரியை போலீசார் சுட்டு பிடித்துள்ளனர்.
கடந்த 21ஆம் தேதி இரவு 11 மணியளவில் TN 23 N 2399 என்ற எண் கொண்ட அரசு பேருந்து வேலூரில் இருந்து சிதம்பரம் நோக்கி வந்துள்ளது.
அந்த பேருந்து ஆள்பேட்டை பகுதிக்கு வந்த போது கௌதமன், நடராஜன், திவான் ஆகிய காவலர்கள் சோதனை செய்தனர். அப்போது பேருந்தில் இருந்த சிதம்பரம் அண்ணாமலை நகர் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீராம்(24), சந்துரு(19) ஆகியோர் 4 கிலோ கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இவர்கள் கொடுத்த தகவலின் படி வல்லம்பாடியைச் சேர்ந்த நவீனை எஸ்.பியின் தனிப்படை போலீசார் வலைவீசி தேடி கைது செய்தனர். இதைத்தொடர்ந்து பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கஞ்சாவை கைப்பற்றுவதற்காக நவீனை அழைத்துச் சென்றபோது அவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் காவலர்களை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றதாக தகவல்கள் வருகின்றன.
அப்போது காவல் ஆய்வாளர் அம்பேத்கர் நவீனை எச்சரித்துள்ளார். எனினும் நவீன் தாக்குதலில் ஈடுபட்டதால் அவரை சுட்டுப் பிடித்ததாக அண்ணாமலை நகர் போலீசார் கூறுகின்றனர்.

தற்போது நவீன் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2025 ஏப்ரல் மாதம்19 ஆம் தேதி 21 கிலோ கஞ்சா பிடிபட்டது. அதில் 11 பேர் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர். அந்த வழக்கிலும் நவீன் சிக்கினார். எனினும் தலைமறைவாக இருந்துகொண்டு போலீஸுக்கு தண்ணி காட்டிய நிலையில் நேற்றிரவு அதிரடியாக சுட்டு பிடிக்கப்பட்டார்.
நவீன் மீது 2 கஞ்சா வழக்குகள் உட்பட 8 வழக்குகள் இருப்பதாக போலீசார் கூறுகின்றனர்.
