பல்லடம் கொலை வழக்கு: தப்ப முயன்றவரை சுட்டுப்பிடித்த போலீஸ்!

Published On:

| By Monisha

police gun fire on suspect

பல்லடம் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான வெங்கடேஷ்  தப்பிக்க முயன்றதால் அவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே செப்டம்பர் 3 ஆம் தேதி இரவு வீட்டின் அருகே அமர்ந்து மது அருந்தியதை தட்டிக் கேட்டதற்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர்   மிக கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்.

இந்த கொடூர கொலையை செய்த வெங்கடேஷ், செல்லமுத்து மற்றும் சோனை முத்தையா ஆகிய மூன்று பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

கைதானவர்களிடம் போலீசார் விசாரித்த போது வெங்கடேஷ் கொலை செய்ய பயன்படுத்திய ஆயுதங்களை பல்லடம் தொட்டம்பட்டி பகுதியில் உள்ள முட்புதர்களில் மறைத்து வைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

சுட்டுப் பிடித்த போலீஸ்

இதனால் இன்று காலை 4.45 மணியளவில் ஆயுதங்களைப் பறிமுதல் செய்வதற்காக வெங்கடேஷை பல்லடம் டி.எஸ்.பி மற்றும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் வேனில் அழைத்துச் சென்றனர். அங்கு மறைத்து வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை வெங்கடேஷ் போலீசாரிடம் எடுத்துக் கொடுத்தார்.

மீண்டும் வேனில் பல்லடம் காவல் நிலையத்திற்கு சென்று கொண்டிருக்கும் போது தொட்டம்பட்டி காட்டுப்பகுதியில் வெங்கடேஷ் சிறுநீர் கழிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதனால் வேனை நிறுத்தி   வெங்கடேஷை போலீசார் கீழே இறக்கி விட்டனர். அவருடன் பாதுகாப்புக்காக 2 போலீஸ் அதிகாரிகளும் உடன் சென்றனர். சிறிது தூரம் சென்றதும் போலீஸ் கண்களில் மண்ணை தூவிவிட்டு வெங்கடேஷ் தப்பி சென்றுள்ளார்.

அப்போது டி.எஸ்.பி சவுமியா  தன்னுடைய துப்பாக்கியை எடுத்து வெங்கடேஷ் காலில் சுட்டதில் நிலைதடுமாறி  கீழே விழுந்தார்.  அவரை பிடிக்க முயன்ற போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாக போலீசார் கூறுகின்றனர்

இந்த தாக்குதலில் போலீஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்தார். இதனையடுத்து டி.எஸ்.பி சவுமியா வெங்கடேஷ் மீது மேலும் ஒரு ரவுண்டு சுட்டதில் மற்றொரு காலிலும் குண்டு பாய்ந்தது.

பின்னர் வெங்கடேஷை மீட்டு போலீசார் பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். வெங்கடேஷ் கற்களால் தாக்கிய போலீஸ் அதிகாரியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  இரண்டு பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முன்விரோதம் காரணமா?

இந்த சம்பவம் குறித்து திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமிநாதன் செய்தியாளர்களை சந்தித்து இன்று விளக்கம் அளித்தார்.

அப்போது பேசிய அவர், “பல்லடம் காவல் நிலையம் அருகே கள்ளகிணறு பகுதியில் 4 பேரை கொலை செய்த குற்றவாளிகள் 5 தனிப்படை அமைக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுப்போம்” என்றார்.

தொடர்ந்து இந்த சம்பவம் எப்படி நடந்தது என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த எஸ்பி, “இந்த கொலை சம்பவம் நடந்த கள்ளக்கிணறு பகுதியில் இருந்து 1.5 கிமீ தொலைவில் குற்றவாளிகள் வசித்து வந்துள்ளனர். குற்றவாளிகள் மது அருந்த வந்த போது, இரு தரப்புக்கும் வாய் தகராறு ஏற்படுகிறது. அப்போது ஆத்திரம் அடைந்த குற்றவாளிகள், அவர்களை வெட்டியும் குத்தியும் தாக்கிக் கொன்றுள்ளனர்.

கொலைகளுக்கு மது போதையில் இருந்தது ஒரு காரணம் என்றாலும், ஏற்கனவே முன்விரோதமும் இருந்துள்ளது. விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.கஸ்டடியில் எடுத்து விசாரிப்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும்.

முக்கிய குற்றவாளி வெங்கடேஷ் தப்பி ஓட முயன்றதால், அவரை காலில் சுட வேண்டிய நிலை ஏற்பட்டது. போலீசிடம் இருந்து தப்பிக்க முயன்ற போது இந்த சம்பவம் நடந்தது. வெங்கடேஷை நேற்றே கைது செய்துவிட்டோம். வெங்கடேஷ் மீது கொலை முயற்சி உள்பட ஏற்கனவே பல வழக்குகள் உள்ளன” என்று தெரிவித்தார்.

மோனிஷா

ராமநாதபுரத்தில் 144 தடை உத்தரவு!

அரசியல்வாதிகளின் அதிகாரம் : நீதிமன்றம் அறிவுரை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share