சென்னையில் கஞ்சா வழக்கில் விசாரிக்கப்பட்டவர்கள் அதிமுக ஆதரவு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள்தான் என அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் கோகுல இந்திரா விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையில் உயர் ரக ஓஜி கஞ்சா விற்பனை விவகாரத்தில் விசாரணைக்குள்ளாக்கப்பட்டவர்களில் ஹரி, சாய் இருவரும் அடக்கம். இவர்கள் அதிமுகவுக்கான தேர்தல் வியூகம் வகுக்கும் நிறுவன பணியாளர்கள் என கூறப்பட்டது. மேலும் இருவரிடமும் விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து சென்னை அரும்பாக்கம் காவல் நிலையம் முன்பாக அதிமுகவினரும் திரண்டிருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சரும் அதிமுகவின் அமைப்புச் செயலாளருமான கோகுல இந்திரா, அரும்பாக்கம் காவல் நிலையம் முன்பாக செய்தியாளர்களிடம் இன்று நவம்பர் 21-ந் தேதி கூறுகையில், ஹரி- சாய் விசாரிக்கப்பட்ட நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் காவல்துறை அதிகாரிகளை சந்தித்து பேசினோம். அப்போது ஹரி, சாய் இருவரும் எந்த குற்றமும் செய்யவில்லை என தெளிவாகவே எடுத்து சொன்னோம்.
காவல்துறையும் இது தொடர்பாக ஆய்வு செய்து, அவர்களுடைய செல்போன்- லேப்டாப் ஆகியவற்றையும் ஆய்வு செய்துவிட்டு ஹரி- சாய் ஆகியோர் தவறு செய்யவில்லை என முடிவு செய்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அதிமுகவுக்கான ஆய்வு அறிக்கை செய்ய வந்தவர்கள்.
எங்கள் ஆதரவு சமூக ஊடக மேலாண்மை நிறுவனமான பிரமான்யா-வைச் சார்ந்த ஹரி மற்றும் சாய் இருவர் மீதும் எந்த தவறும் இல்லை என்ற அடிப்படையில் விடுக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எப்போதும் அதிமுக உறுதுணையாக இருக்கும். இதனை நிரூபிக்க அதிமுக வழக்கறிஞர்கள் மும்முரமாக செயல்பட்டு இன்றைக்கு ஒரு நியாயம் கிடைத்துள்ளது என்றார்.
