தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து அவர் புறப்பட்டுச் செல்லும் போது, அவருடன் வந்த தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவின் கார் ஒரு காவலர் மீது மோதியது. அதில் காவலருக்கு கால் முறிவு ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், முதல் முறையாக தேர்தல் களம் காணும் தவெக தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். கடந்த மார்ச் 30ஆம் தேதி பெரம்பூர் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்த விஜய், இன்று திருச்சி வந்தார்.
திருச்சி கிழக்கு தொகுதியில் இன்று (ஏப்ரல் 2) வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர், திருச்சி மரக்கடையில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு பிரச்சாரத்தைத் தொடங்கினார். பிரச்சாரம் முடிவடைந்த பிறகு, அவருடன் வந்த தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா சென்ற கார், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர் மீது மோதியது.இந்த விபத்தில் காவலரின் காலில் முறிவு ஏற்பட்டது. உடனடியாக அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். விபத்தில் சிக்கிய காவலர் சதீஷ் என்பது தெரியவந்துள்ளது.
முன்னதாக, பிரச்சாரம் முடிந்து விஜய் கிளம்பியபோது அவரது வாகனத்தை ரசிகர்கள் வழக்கம்போல் பின்தொடர்ந்தனர். இதில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு தம்பதியினர் தடுமாறி கீழே விழுந்தனர். அப்போது விஜய் தனது பிரச்சார வாகனத்திலிருந்து இறங்கி வந்து அவர்களை சந்தித்ததும் குறிப்பிடத்தக்கது.
