தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வரும் நடிகர் விஜய் சேதுபதி மீது டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சி ஒன்றில் உலக பிரசித்தி பெற்ற செட்டிநாட்டு பாரம்பரியமான ஆத்தங்குடி டைல்ஸ் உண்மையானது இல்லை என்று உண்மைக்கு மாறாக கேஏஜி டைல்ஸ் தான் அசல் ஆத்தங்குடி டைல்ஸ் என்று நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நடிகர் தீபக் பேசியிருந்தார். அது தொலைக்காட்சியிலும் ஒளிப்பரப்பானது.
இதனையடுத்து, ஆத்தங்குடி டைல்ஸ் குறித்து தவறான செய்தி பரப்பிய தனியார் தொலைக்காட்சி மீதும், கேஏஜி டைல்ஸ் நிறுவனத்தின் மீதும், தொகுப்பாளர் நடிகர் விஜய் சேதுபதி மீதும் வழக்கு பதிவு செய்யக்கோரி ஆத்தங்குடி டைல்ஸ் உரிமையாளர்கள் தொழிலாளர்கள் காரைக்குடி காவல் உதவி கண்காணிப்பாளர் பார்த்திபனிடம் நேற்று (டிசம்பர் 16) புகார் அளித்தனர்.
புகாரை பெற்றுக்கொண்ட டிஎஸ்பி, உடனடியாக இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக புகார் அளித்த ஆத்தங்குடி டைல்ஸ் உரிமையாளர்களில் ஒருவரான அலெக்ஸ் கூறுகையில், ”சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஆத்தங்குடி டைல்ஸ் பல நூறு ஆண்டுகளாக பாரம்பரிய முறையில், இங்குள்ள வாரி மண் மூலம் தயாரிக்கப்பட்டு வருகிறது. சீதோஷ்ண நிலைக்கு ஏற்றவாறு உடலுக்கு நன்மை பயக்க கூடியது. இந்தியாவிலேயே இன்றும் குடிசை தொழிலாக இந்த ஆத்தங்குடி டைல்ஸ் தயாரிக்கப்பட்டு தமிழகம் மட்டுமன்றி, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உட்பட பல்வேறு மாநிலங்களில் வீடுகளிலும், ஓட்டல்களிலும் பதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த 14 தேதி நடிகர் விஜய் சேதுபதி தனியார் டிவி நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியில், ஆத்தங்குடி டைல்ஸ் உண்மையானது இல்லை கேஏஜி டைல்ஸ் தான் அசல் ஆத்தங்குடி டைல்ஸ் என்றும் நடிகர் தீபக் தவறான கருத்தை பதிவிட்டு அதை ஒளிபரப்பு செய்தனர்.
இந்நிகழ்ச்சி மூலம் எங்கள் தொழில் மீது தவறான கருத்து பரப்பப்பட்டுள்ளது. இதனால் எங்கள் தொழிலுக்கு பொருளாதார இழப்பு ஏற்படுத்தி, எங்களுடைய தனிச்சிறப்பையும் இழிவுபடுத்தியுள்ளார். இந்நிகழ்ச்சியில் அவர்கள் கூறியதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை.
எனவே எங்கள் மீது வீண்பழி சுமத்தி அவதூறு கூறிய கேஏஜி டைல்ஸ் நிறுவனம், விஜய் டிவி நிர்வாகம் மற்றும் பிக்பாஸை தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதி மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க புகார் அளித்துள்ளோம். தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை எனில் முதல்வர், பிரதமர், மத்திய தொழில்துறை அமைச்சகம் அனைத்திலும் புகார் அளிக்கப்படும்” என்று அலெக்ஸ் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 நியூஸ் : ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல் முதல் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் வரை!
கிச்சன் கீர்த்தனா : கேரட் சட்னி