ஜல்லிக்கட்டுக்கு கவிஞர் தாமரை எதிர்ப்பு!

Published On:

| By Kavi

கிராமப்புறங்களில் அந்தந்த வட்டார வழக்கு, சூழலுக்கு ஏற்ப ஜல்லிக்கட்டு, எருது விழா என விவசாயிகளால் கொண்டாடப்பட்டு வந்தது.

பொதுவாக அறுவடை மாதங்களில் இந்த விழாக்கள் நடத்தப்படும். ஜல்லிக்கட்டு, எருதுகட்டு, கோவில் கொடை, முத்தாலம்மன், மாரியம்மன் திருவிழாக்கள் என்பது பிழைப்புக்காக வெளியூர், வெளி மாநிலங்களுக்கு குடிபெயர்ந்தவர்கள் வருடத்திற்கு ஒருமுறை சந்திக்கவும் அந்த சந்திப்பின் மூலம் நலம் விசாரிப்பு, தங்கள் சொந்த உறவுகளில் பெண், மாப்பிள்ளை தேர்வுகள் நடத்த இந்த விழாக்கள் பயன்பட்டு வந்தன.

அதனால் இது போன்ற நிகழ்வுகளுக்கு எங்கு இருந்தாலும் என்ன வேலை இருந்தாலும் புறம் தள்ளி தங்கள் பிறந்த மண்ணில் கூடுவதை இன்றளவும் கடைபிடித்து வருகின்றனர்.

விலங்குகள் நல ஆர்வலர்கள் ஜல்லிகட்டு, எருது விடுவிழா, சேவல் சண்டைகளுக்கு எதிராக குரல் எழுப்பியதுடன், நீதிமன்றங்கள் மூலமாக அதனை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

கடந்த 2017 ஜனவரியில் தொடர் போராட்டத்தையும் நடத்தினர். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது மாநிலத்தில் ஆட்சி பொறுப்பில் ஓ.பன்னீர்செல்வம் இருந்தார்.

அப்போது, ஆட்சி நிர்வாகம் கூறியதை கேட்க மறுத்த போது சில மணிநேரங்களில் தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தை நீர்த்து போக காவல்துறை அதிகாரத்தை பயன்படுத்தி முடிவுக்கு கொண்டுவந்தது.

ஜல்லிகட்டு நடத்துவதற்கு நீதிமன்றம் மூலம் சட்டபூர்வமான அனுமதியை தமிழக அரசு பெற்றதால் எந்தவித இடையூறு, தடங்கல் இன்றி ஜல்லிகட்டு விழா நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை தடை செய்ய வேண்டும் என்று விலங்குகள் நல அமைப்பான பீட்டாவைப் போல திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் தாமரை தெரிவித்துள்ள கருத்து பெரும் சர்ச்சையாகி உள்ளது.

poet thamarai against jallikattu

இது தொடர்பாக கவிஞர் தாமரை தனது முகநூல் பக்கத்தில், ஜல்லிக்கட்டு என்னும் விளையாட்டு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் ‘வீர விளையாட்டா’க இருந்திருக்கலாம், காலத் தொடர்ச்சியில் அது மரபாக மாறி விட்டிருக்கலாம்.

ஆனால், பலவகையான மரபுகள் குறித்து காலத்துக்குக் காலம் சிந்தனைகள் மாறி வருகின்றன என்பதை மறந்து விடலாகாது. மன்னராட்சி ஒழிந்து மக்களாட்சி மலர்ந்ததே அவ்வகைச் சிந்தனை மாற்றத்தினாலேயே!

விலங்குகளுக்கும் உணர்வு உண்டு, வாழும் ஆசை, உரிமை உண்டு எனும் சிந்தனை வளர்ச்சியால் ‘விலங்குரிமை’க் குரல்கள் எப்போதைக் காட்டிலும் இப்போது அதிகமாக எழுகின்றன.

மனிதனை மனிதன் பொருதுவதே சரியல்ல என்றாலும் இருதரப்புக்கும் அதுகுறித்த தெளிவுண்டு என்கிற அளவில் நாம் அதைத் தடுக்கலாகாது. ஆனால் ஐந்தறிவு கொண்ட, தன் தரப்பை எடுத்துரைக்க வாயில்லாத மாடு போன்ற உயிரினங்களோடு பொருதுதல் ‘விளையாட்டின்‘பாற் படாது, ‘வினை’யின்பாற் படும்.

ஆயிரக்கணக்கானோர் கூடி ஆர்ப்பரிக்க, என்ன நிகழ்கிறது என்று தெரியாமல் திகைக்கும் மாட்டை நூற்றுக்கணக்கானோர் துரத்தி, இழுத்து, குத்தி, சாய்த்து ‘வீரப்பட்டம்’ வாங்குவது கேவலத்திலும் கேவலம்!

எந்த விளையாட்டிலும் இருதரப்புக்கும் விளையாட்டின் விதிமுறைகள் தெரியும், ஒப்புக்கொண்டு கையெழுத்திட்ட பிறகே விளையாட்டு தொடங்கும். ஆனால் ஜல்லிக்கட்டில் மறுதரப்பான மாட்டுக்கு என்ன நடக்கிறது என்றே தெரியாது மிரள்கிறது, தன்னுயிரைக் காத்துக் கொள்ள ஓடித் தப்ப முயல்கிறது.

மாட்டின் அனுமதியின்றி நிகழும் இது விளையாட்டில்லை, வன்முறை!. காளை மாடுகள் தேவை, வெளிநாட்டு சதி, வீர விளையாட்டு, தமிழ்ப்பண்பாடு, மரபு, இத்யாதி இத்யாதி… வாதங்கள் இனி எடுபடாது.

தமிழ்ப் பண்பாட்டைக் காக்க வேண்டுமெனில், தமிழில் பேசிப் பழகுங்கள், அம்மா அப்பா என்று அழையுங்கள், குழந்தைகளுக்குத் தமிழில் பெயரிடுங்கள்…. விலங்குகளை விட்டு விடுங்கள்… அவை புல் பூண்டு இலை தழை பிண்ணாக்கு பருத்தி உண்டு பிழைத்துப் போகட்டும்… உங்களுக்காக அவை கொம்பு சீவத் தேவையில்லை!

ஜல்லிக்கட்டு தமிழருக்குத் தேவையில்லை, அதை வீர விளையாட்டாகக் கருதாமல் வன்கொடுமையாகக் கருதி, தடை செய்ய வேண்டுமென தமிழ்நாட்டரசைக் கேட்டுக் கொள்கிறேன்.

ஓரேயடியாக இல்லாவிட்டாலும், மக்களிடம் விலங்குரிமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, படிப்படியாகக் குறைத்து காலப்போக்கில் இல்லாது ஒழிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

பலருக்கும் ஜல்லிக்கட்டு தொடர்பாக இதுபோன்ற எண்ணம் இருக்கும், எனினும் வெளிப்படுத்தினால் தமிழ் எதிரியாகக் கருதப்படுவர் என்பதனால் மறைத்து வைத்திருப்பர். அவர்கள் தயவுசெய்து, இந்த நேரத்திலாவது முன்வந்து தங்கள் எதிர்ப்பைக் காட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

என்னை வசைபாட, தமிழர் பண்பாடு குறித்துப் பாடம் எடுக்க இப்போது பலர் கிளம்பி வருவர். அவர்க்கெல்லாம் நான் சொல்ல விரும்பும் குறள்,

“செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க செய்யாமை யானும் கெடும்”

என கவிஞர் தாமரை தெரிவித்துள்ளார்.

இராமானுஜம்

டெல்லி பயணம்: அமித்ஷாவை சந்திக்கும் ஆளுநர் ரவி

3 மாநில தேர்தல்: முக்கிய அறிவிப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share