போக்சோ சட்டத்தைத் திருத்தம் செய்யத் தக்க தருணம்: உயர் நீதிமன்றம்!

Published On:

| By Balaji

போக்சோ சட்டத்தில் திருத்தம் கொண்டுவர இதுவே தக்க தருணம் என்றும் போக்சோ சட்டத்தால் பல இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை இழந்து விடுவதாகவும் சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

2018ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் இந்திரன் என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த மைனர் பெண்ணை கடத்தி திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்ததாக ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பெண்ணின் தாயார் அளித்த புகாரின் பேரில், போக்சோ சட்டப் பிரிவின் கீழ் அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு ஈரோடு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

ADVERTISEMENT

தற்போது அந்தப் பெண் திருமண வயதை எட்டியுள்ளார். இந்த சூழலில் அந்தப் பெண்ணும் அவரது தாயாரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்துள்ளனர். அதில் பெண்ணின் திருமணத்திற்கு இந்த வழக்கு தடையாக உள்ளதால் இதை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், காதல் உறவு காரணமாகச் சமீப நாட்களாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்படுவது அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் போக்சோ சட்டத்தில் உரியத் திருத்தங்கள் கொண்டுவர இதுவே தக்க தருணம் என்றும், பல பதின்பருவ இளைஞர்கள் போக்சோ சட்டத்தால் தங்களது வாழ்க்கையை இழந்து விடுகின்றனர் என்றும் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

இந்த வழக்கை நிலுவையில் வைத்திருப்பதால் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கும், அவரது தாய்க்கும் குற்றம் சாட்டப்பட்டவருக்கும் மன உளைச்சல் அதிகரிக்குமே தவிர வேற எந்த பயனும் இருக்காது என்று கூறி இந்திரன் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். போக்சோ சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது குறித்து மத்திய மாநில அரசுகள் பரிசீலித்து முடிவு எடுக்கவும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

**-பிரியா**

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share