திருப்புவனம் பாமக நிர்வாகி ராமலிங்கம் படுகொலை வழக்கில் கொடைக்கானலைச் சேர்ந்த இம்தாத்துல்லா, என்.ஐ.ஏ. (NIA) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
2019-ம் ஆண்டு திருப்புவனம் பாமக பிரமுகர் ராமலிங்கம் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். மதமாற்றத்தைத் தடுத்ததால் ராமலிங்கம் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வழக்கை தேசிய புலனாய்வு ஏஜென்சியான NIA விசாரித்து வருகிறது.
இவ்வழக்கில் ஏற்கனவே 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களில் இன்று காலை முதல் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதேபோல தென்காசி மாவட்டத்திலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனை மற்றும் விசாரணையின் முடிவில் கொடைக்கானலில் ஆம்பூர் பிரியாணி கடை நடத்தி வந்த இம்தாத்துல்லா கைது செய்யப்பட்டுள்ளார். 2019-ல் பாமக பிரமுகர் ராமலிங்கம் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இம்தாத்துல்லா கைது செய்யப்பட்டுள்ளதாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்புவனம் ராமலிங்கம் படுகொலை வழக்கில் தொடர்புடைய மேலும் 4 பேர் தேடப்பட்டு வருகின்றனர்.
