பாமகவில் இருந்து செயல் தலைவர் அன்புமணியை தற்காலிகமாக நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கு பரிந்துரைத்து அக்கட்சியின் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. PMK Anbumani Ramadoss
திண்டிவனத்தை அடுத்த ஓமந்தூரில் ராமதாஸ் பாமகவின் செயற்குழு கூட்டம் இன்று ஜூன் 8-ந் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பாமக (செயல்) தலைவர் அன்புமணி இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டிய நிலையில் இந்த செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு அன்புமணி அழைக்கப்பட்டதாக பாமக கவுரவத் தலைவர் ஜிகே மணி கூறியிருந்தார். ஆனால் அன்புமணி, இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த செயற்குழுக் கூட்டத்தில் மொத்தம் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் 11-வது தீர்மானம், அன்புமணியை தற்காலிக நீக்கம் செய்ய ராமதாஸுக்கு பரிந்துரைக்கிறது.
பாமக செயற்குழுவில் அன்புமணி நீக்கம் தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மான விவரம்:
தலைமை உத்தரவுக்கு கட்டுப்படாமல், கட்சியை பலவீனப்படுத்தும் நபர்கள் மீது கட்சி விதிகளின்படி ஒழுங்கு நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு விசாரணை நடத்தி தேவைப்பட்டால் தற்காலிக நீக்கம் செய்து, பிறகு, நடவடிக்கைகளை எடுத்து கட்சியின் மாண்பையும் நிறுவன மாண்பையும் நிறுவனரே தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு நிறுவனருமான அவருக்குப் பொறுப்பற்ற பதிலை சொல்லி பொதுவெளியில் அவருடைய பேச்சுக்குக் கட்டுப்படாமல் இருப்பது மிக வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
அப்படிப்பட்ட செயலுக்கு அந்த ‘செயல் தலைவர்’ (அன்புமணி பெயரை குறிப்பிடவில்லை) வருத்தம் கேட்டுக் கொள்வது மட்டுமல்லாமல், தனக்கு பதவி ஒன்றும் தேவை இல்லை என்றும் தொண்டராக இருப்பேன் என்றும் மூன்றாண்டுகள் பதவி வகித்த பிறகு மீண்டும் தலைவர் பதவியை அபகரிக்கும் எண்ணத்தில் நிறுவனத் தலைவர் இதுவரை கட்டி காத்து வந்த ஒரு கட்டுப்பாட்டினை பொதுவெளியில் கட்சிக்கு மட்டும் களங்கம் விளைவிக்காமல், நிறுவனத் தலைவருக்கும் களங்கத்தை உருவாக்கும் வகையில் செய்து உள்ள செயல் மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
அப்படிப்பட்ட ஒரு நடவடிக்கை யார் செய்தாலும் அவர்களை கட்சி கண்டிப்பாக நடவடிக்கை எடுத்து விசாரிக்கும் என்பதை செயற்குழு வாயிலாக தீர்மானம் செய்து அப்படிப்பட்ட நடவடிக்கையை நம்முடைய மருத்துவர் அய்யா, நிறுவனத் தலைவர் மற்றும் தலைவராக உள்ளவருக்கு அங்கீகாரம் வழங்கி ஏற்பாடு செய்ய தீர்மானிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

ராமதாஸ் மகள் பங்கேற்பு
இந்தக் கூட்டத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் மூத்த மகள் ஶ்ரீகாந்தியும் கலந்து கொண்டார். ராமதாஸ், அன்புமணி இடையே சமாதானம் ஏற்படுத்துவதற்காக முயற்சிகளை மேற்கொண்டவர் ஶ்ரீகாந்தி.
பாமக செயற்குழு தீர்மானங்கள்- முழுமையாக
