பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் அதன் ‘மாம்பழம்’ தேர்தல் சின்னம் ஆகியவற்றுக்கு உரிமை கோரி அன்புமணி தரப்பு மனுத் தாக்கல் செய்தால் தங்களது தரப்பு கருத்தையும் கேட்க வேண்டும் என சென்னை உரிமையியல் நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் ஆகியவற்றில் டாக்டர் ராமதாஸ் கேவியட் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளார்.
பாமக நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் ராமதாஸ், அவரது மகனும் கட்சி செயல் தலைவருமான அன்புமணி இடையே பல மாதங்களாக மோதல் நீடித்து வருகிறது. இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்காக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சமாதான முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்துவிட்டன.
இதனைத் தொடர்ந்து அன்புமணியை பாமக செயல் தலைவர் பதவியில் இருந்து நீக்க ராமதாஸ் முடிவு செய்துள்ளார். இதற்கு முன்னதாக, அன்புமணியிடம் விளக்கம் கேட்டு பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பியது. அன்புமணி [பதில் தருவதற்கு 2 முறை அவகாசம் கொடுக்கப்பட்டது. 2-வது முறையாக கொடுக்கப்பட்ட கால அவகாசம் இன்று செப்டம்பர் 10-ந் தேதியுடன் முடிவடைகிறது. இதுவரை அன்புமணி தரப்பில் எந்த பதிலும் கொடுக்கப்படவில்லை. இதனால் பாமக செயல் தலைவர் பதவியில் இருந்து அன்புமணி ராமதாஸ் இன்று நீக்கப்படக் கூடும் என கூறப்படுகிறது.
இந்த பின்னணியில் இன்று சென்னை உரிமையியல் நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் ஆகியவற்றில் டாக்டர் ராமதாஸ் கேவியட் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளார். அதில், பாமகவின் கட்சி மற்றும் மாம்பழம் சின்னம் ஆகியவற்றுக்கு அன்புமணி தரப்பு உரிமை கோரினால் தங்களது தரப்பு வாதங்களையும் கேட்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
