சீனா அதிபர் ஜி ஜின்பிங்கை நேற்று சந்தித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி இன்று ரஷ்யா அதிபர் புதினை சந்தித்து பேசினார்.
சீனாவின் தியான்ஜின் மாநகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, சீனா அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின் போது, கடந்த ஆண்டு அக்டோபரில் கசானில் நடைபெற்ற சந்திப்புக்குப் பின் இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள நிலையான முன்னேற்றத்தை இரு தலைவர்களும் வரவேற்றனர். இரு நாடுகளும் போட்டியாளர்கள் அல்ல எனவும் வளர்ச்சி கூட்டாளிகள் என்றும், வேறுபாடுகள் சர்ச்சைகளாக மாறக்கூடாது என்றும் அவர்கள் கூறினர். பரஸ்பர மரியாதை, பரஸ்பர ஆர்வம், பரஸ்பர உணர்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே ஒரு நிலையான உறவும் ஒத்துழைப்பும் உள்ளது எனவும், இது இரு நாடுகளின் வளர்ச்சிக்கும், 21-ம் நூற்றாண்டின் போக்குகளுக்கு ஏற்ப ஒட்டுமொத்த ஆசியாவிற்கும் அவசியம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் இந்தியாவும் சீனாவும் உத்திசார் சுயாட்சியைப் பின்பற்றுகின்றன என்றும், அவற்றின் உறவுகளை மூன்றாம் நாடுகளின் பார்வையில் பார்க்கக்கூடாது என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். பயங்கரவாதம் எதிர்ப்பு, நியாயமான வர்த்தகம் போன்ற பலதரப்பு விஷயங்களிலும், இருதரப்பு, பிராந்திய, உலகளாவிய சவால்கள் தொடர்பாகவும் பொதுவான நிலையை விரிவுபடுத்துவது அவசியம் என்று இரு தலைவர்களும் கூறினா்.
இதனைத் தொடர்ந்து ரஷ்யா அதிபர் புதினை இன்று சந்தித்து பேசினார் பிரதமர் மோடி. ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதால் அமெரிக்கா, கொடூரமான 50% வரி விதிப்பை அமல்படுத்தியிருப்பது தொடர்பாகவும் உக்ரைன் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாகவும் இரு தலைவர்களும் இன்று விவாதித்தனர்.
மேலும் சீனா அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்யா அதிபர் புதின் , பிரதமர் நரேந்திர மோடி மூவரும் ஷாங்காய் மாநாட்டு அரங்கில் ஒன்றாக கை குலுக்கி, கை கோர்த்து சிரித்து பேசிக் கொண்டிருந்தது உலக நாடுகளின் கவனம் பெற்றுள்ளது.
ரஷ்யா அதிபர் புதினுடனான சந்திப்பு படத்தை தமது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பிரதமர் மோடி, புதினை சந்திப்பதில் எப்போதும் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.
