தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து முதல்வர் ஸ்டாலினை தொடர்பு கொண்டு பிரதமர் மோடி கேட்டறிந்தார்.
தென் மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் கொட்டித் தீர்த்த கனமழையால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறியது.
ஒரு வாரமாகியும் தூத்துக்குடி மாவட்டத்தின் சில பகுதிகளில் தற்போது வரை வெள்ளம் வடியாமல் உள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் அரசு மூலமாகவும், தன்னார்வலர்கள் மூலமாகவும் நடைபெற்று வருகிறது.
வெள்ள பாதிப்புகளை மத்திய குழு ஆய்வு செய்து வருகிறது. இந்நிலையில் தான் பிரதமர் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு வெள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்ததாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
https://twitter.com/mkstalin/status/1738935591469982090
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “தென் தமிழகத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளம் குறித்து விசாரிக்க பிரதமர் நரேந்திர மோடி என்னை தொடர்பு கொண்டார்.
அவரிடம் மாநில அரசு மேற்கொண்ட மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து விளக்கி மத்திய அரசின் உதவியை கேட்டேன். இரட்டை பேரிடர்களை சமாளிக்க மத்திய அரசு உதவும் என்று பிரதமர் உறுதியளித்துள்ளார்.
வெள்ள பாதிப்புகளை மதிப்பீடு செய்வதற்காக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை நியமித்துள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
