சென்னையில் பிரதமர் மோடியின் ரோடு ஷோ தொடங்கியது.
தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பாஜக தேசிய தலைவர்கள் தமிழ்நாடு வந்து பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
கட்சித் தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஸ்மிருதி இரானி, அனுராக் சிங் தாக்கூர் உள்ளிட்ட தேசிய தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர்.
இந்நிலையில் ஏற்கனவே 6 முறை தமிழ்நாடு வந்து சென்ற பிரதமர் மோடி மீண்டும் இன்று (ஏப்ரல்9) சென்னை வந்தார்.
மாலை 5.45 மணிக்கு மேல் விமானப்படை விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்த பிரதமர் அங்கிருந்து காரில் சாலை மார்கமாக தி.நகர் வந்தார்.
தி.நகர் பனகல் பார்க் பகுதிக்கு வந்த பிரதமர் மோடி, அங்கு பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரச்சார வாகனத்தில் ஏறினார். அவருடன் மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் ஆளுநரும் தென் சென்னை வேட்பாளருமான தமிழிசை சவுந்தரராஜன், மத்திய சென்னை வேட்பாளர் வினோஜ் பி செல்வம், வட சென்னை பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் ஆகியோரும் ஏறினர்.
பின்னர் பனகல் பார்க் பகுதியில் இருந்து வாகன பேரணி தொடங்கியது. சாலையின் இருபுறமும் திரண்டிருந்த பாஜகவினரும், பொதுமக்களும் பூக்கள் தூவி பிரதமருக்கு வரவேற்பு அளித்து வருகின்றனர்.
அவர்களை பார்த்து தாமரை சின்னத்தை காட்டியவாறு பிரதமர் மோடி வாக்கு சேகரித்து வருகிறார்.
மயிலாட்டம்,இசை நிகழ்ச்சி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடன் பிரதமரின் வாகன பேரணி நடைபெற்று வருகிறது.
பனகல் பூங்கா முதல் தேனாம்பேட்டை சிக்னல் வரை வாகனப் பேரணி நடைபெறவுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா