கோவை பேருந்து நடத்துநரை பாராட்டிய மோடி

Published On:

| By Balaji

கோவை பேருந்து நடத்துநர் மாரிமுத்து யோகநாதனுக்கு பிரதமர் நரேந்திர மோடி மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக் கிழமையன்று பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் வானொலியில் நாட்டு மக்களிடம் நேரடியாக உரையாடுவது வழக்கம். அதன்படி, 75ஆவது முறையாக இன்று(மார்ச் 28) மான் கி பாத் நிகழ்ச்சியில் வானொலியில் பேசும் போது, இந்தியாவில் உள்ள பல்வேறு சாதனையாளர்கள் குறித்து பேசியுள்ளார்.

ADVERTISEMENT

கொரோனாவை கட்டுபடுத்த கடந்தாண்டு இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு ஒட்டுமொத்த உலகிற்கே உத்வேகமாக அமைந்தது. உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை இந்தியா செயல்படுத்தி வருகிறது. புதிய நம்பிக்கையுடனும், எதிர்பார்ப்புகளுடனும் நாட்டின் பல மாநிலங்களில் பண்டிகைகள் கொண்டாடபடுவதாக மோடி தெரிவித்தார்.

10 ஆயிரம் ரன்களை குவித்துள்ள இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜையும், பயணிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்கி வரும் கோவை பேருந்து நடந்துநர் மாரிமுத்து யோகநாதனுக்கும் பாராட்டுகளை பிரதமர் மோடி தெரிவித்தார்.

ADVERTISEMENT

இயற்கைக்கு மிகப்பெரிய சேவையை ஆற்றிய யோகநாதன், தனிமனிதராக இருந்து ஒரு காட்டையேஉருவாக்கியுள்ளார். தனது பெரும்பாலான வருமானத்தை இதற்காக செலவிட்டு வருகிற மாரிமுத்து யோகநாதனுக்கு எனது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று மோடி கூறினார்.

**யார் இந்த மாரிமுத்து யோகநாதன் **

ADVERTISEMENT

மரம் நடுவதில் புதிய புரட்சியை செய்தவர் என மோடி பாராட்டை பெற்ற கோவை பேருந்து நடத்துநர் மாரிமுத்து யோகநாதன் 34 வருடங்களில், 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டுள்ளார். பயணிகளிடம் டிக்கெட் கொடுக்கும்போது மரக்கன்றுகளை இலவசமாக கொடுத்து வருகிறார்.

தனது சம்பளத்தில் 40 சதவிகிதத்தை மரக்கன்றுகள் வாங்குவதற்கு செலவழிக்கிறார். மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி,பல்கலைக்கழகங்களில் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். இதனால், அப்பகுதி மக்கள் இவரை ’மரங்களின் மனிதன்’, ’இயற்கையின் நண்பன்’ என அழைக்கின்றனர்.

இந்த சேவைக்காக முன்னாள் துணை குடியரசு தலைவர் ஹமீது அன்சாரியிடமிருந்து எக்கோ வாரியர் என்ற விருதையும், தமிழக அரசின் சத்ரு சஜால் சேவை வீரர் விருதையும் பெற்றுள்ளார். பல்வேறு பரிசுகளையும், விருதுகளையும் வாங்கிய யோகநாதனை பாராட்டி சிபிஎஸ் இ திட்டத்தில் இவரின் பாடம் சேர்க்கப்பட்டுள்ளது.

**வினிதா**

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share