தலைநகர் டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்தவர்களை பிரதமர் நரேந்திர மோடி மருத்துவமனையில் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டை பகுதியில் மெட்ரோ ரயில் நிலையம் அருகே கடந்த திங்களன்று மாலை 6.52 மணியளவில் கார் வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவத்தில் 12 பேர் பலியாகினர். 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ள கார் வெடிப்பு சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் நடந்த இடத்தில் தோட்டாக்கள் உள்பட 40 மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. இச்சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் இரண்டு நாள் பயணமாக பூடான் நாட்டிற்கு சென்றிருந்த பிரதமர் மோடி இன்று நாடு திரும்பினார். விமான நிலையத்தில் இருந்து பிரதமர் மோடி நேரடியாக டெல்லியில் உள்ள லோக் நாயக் மருத்துவமனைக்கு சென்றார்.
அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து அங்கிருந்த மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில், டெல்லியில் நடந்த வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்தவர்களை LNJP மருத்துவமனைக்குச் சென்று சந்தித்தேன். அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
சதித்திட்டத்தின் பின்னணியில் இருந்தவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்!” என தெரிவித்துள்ளார்.
