பாகிஸ்தான் மீதான தாக்குதல்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில் டெல்லியில் முப்படை தளபதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். இதனிடையே பாகிஸ்தானுடனான மோதல் குறித்து விவாதிக்க, நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வை உடனே கூட்ட வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.
அமெரிக்காவின் தலையீட்டால் பாகிஸ்தான் மீதான அனைத்துவிதமான தாக்குதல்களையும் நேற்று மாலை 5 மணி முதல் நிறுத்துவதாக மத்திய அரசு அறிவித்தது. ஆனால் போர் நிறுத்தத்தை மீறியும் பாகிஸ்தான் நேற்று இரவு பல மணிநேரம் தொடர்ச்சியாகத் தாக்குதல்கள் நடத்தியது. இதில் எல்லைப் பாதுகாப்பு படை வீரர் உள்ளிட்டோர் உயிரிழந்தனர்.
இதனையடுத்து போர் நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் தொடர்ச்சியான தாக்குதல் நடத்தினால் பதிலடி தருவோம் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்தது. இதனால் கடந்த பல மணிநேரங்களாக போர்ப் பதற்றம் நிலவிய ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப், இமாச்சல பிரதேச எல்லை மாநிலங்களில் அமைதியும் இயல்பு வாழ்க்கையும் திரும்பி உள்ளது.
இந்நிலையில் டெல்லியில் முப்படைகளின் தளபதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம்
இதனிடையே பாகிஸ்தானுடனான மோதல்கள், தற்காலிக தாக்குதல் நிறுத்தம், அமெரிக்காவின் தலையீடு உள்ளிட்டவை குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.