இந்திய பொருட்கள் மீது 50% வரி விதித்துள்ள அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் பேச்சுவார்த்தை நடத்த தாம் ஆவலுடன் இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் திடீரென இந்தியாவுக்கு நட்புக்கரம் நீட்டியுள்ளார். தமது சமூக வலைதளப் பக்கத்தில், ” இந்தியாவும் அமெரிக்காவும் வர்த்தக தடைகளை அகற்றும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருவதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். வரும் வாரங்களில் எனது நல்ல நண்பர் நரேந்திர மோடியுடன் பேச இருப்பதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நமது இரு பெரிய நாடுகளிடையே வெற்றிகரமான முடிவு ஏற்படுவதில் சிக்கல் இருக்காது என நம்புகிறேன் என தெரிவித்திருந்தார்.
இதற்கு பிரதமர் மோடி அளித்த பதில்: இந்தியாவும், அமெரிக்காவும் இயற்கையாகவே நெருங்கிய நட்பு நாடுகள். இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக பேச்சுவார்த்தைகள் நாம் இணைந்து செயல்படுவதற்கான எல்லையற்ற வாய்ப்புக்களுக்கு வழி வகுக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. வர்த்தகம் தொடர்பான விவாதங்களை விரைவில் முடிக்கும் வகையில் இருநாடுகளின் பிரதிநிதிகள் குழுக்கள் பணியாற்றி வருகின்றன. அமெரிக்க அதிபர் திரு டிரம்புடன் பேர்ச்சுவார்த்தை நடத்தவும் ஆவலுடன் காத்திருக்கிறேன். இரு நாட்டு மக்களுக்கும் பிரகாசமான, வளமான எதிர்காலத்தைப் பெறும் வகையில் நாம் ஒன்றாக இணைந்து செயல்படுவோம். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
