சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நாகாலாந்து ஆளுநர் இல கணேசன் இன்று (ஆகஸ்ட் 15) காலமானார்.
தேசியவாதியாக நினைவுகூரப்படுவார்!
இதனையொட்டி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “நாகாலாந்து ஆளுநர் இல. கணேசன் மறைவால் துயரமடைந்தேன். அவர் ஒரு பக்தியுள்ள தேசியவாதியாக நினைவுகூரப்படுவார், அவர் தனது வாழ்க்கையை சேவை மற்றும் தேசக் வளர்ச்சிக்காக அர்ப்பணித்தார். தமிழ்நாடு முழுவதும் பாஜகவை விரிவுபடுத்த அவர் கடுமையாக உழைத்தார். தமிழ் கலாச்சாரத்தின் மீதும் அவருக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுடன் உள்ளன. ஓம் சாந்தி” எனத் குறிப்பிட்டுள்ளார்.
அரிய தலைவர்களில் ஒருவர்!
அதே போன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், “மாற்றுக் கொள்கைகள் கொண்ட இயக்கங்களில் உள்ள தலைவர்களிடத்திலும் மரியாதை பாராட்டி, மாண்புடன் நடந்துகொண்டு, அரசியல் நாகரிகத்தைப் பேணிக்காத்த அரிய தலைவர்களில் ஒருவர். அரசியல் வாழ்க்கைக்காக திருமணம் கூட செய்து கொள்ளாமல் பொது வாழ்வுக்குத் தம்மை அர்ப்பணித்தவர்.
உடல்நலம் குன்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் முழு உடல்நலம் பெற்று, மீண்டு வருவார் என எதிர்பார்த்திருந்த நிலையில், அவரது மறைவுச் செய்தி வேதனையளிக்கிறது. அன்னாரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினர், அரசியல் கட்சித் தலைவர்கள், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.” எனத் தெரிவித்துள்ளார்.
கலைஞரிடம் நெருங்கி பழகியவர்!
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில், “உடல்நலக்குறைவால் சிகிச்சையில் இருந்த நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் மறைவுற்றச் செய்தி அறிந்து வருத்தமுற்றோம். தமிழ் ஆர்வலர். கலைஞரிடம் நெருங்கி பழகியவர். தலைவர் அவர்கள் மீது அன்பு கொண்டவர். நீண்ட பொதுவாழ்வுக்குச் சொந்தக்காரரான பெரியவர் இல.கணேசன் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கல். அவரை இழந்து வாடும் குடும்பத்தார் – நண்பர்களுக்கு என் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
