இலங்கையின் புதிய அதிபராக அனுர குமார திசாநாயக்க பதவியேற்ற பிறகு, பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக நேற்று (ஏப்ரல் 4) இரவு இலங்கை சென்றடைந்தார்.
இந்த பயணத்தின் போது வர்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை சென்றுள்ள பிரதமர் மோடி, கச்சத்தீவை திரும்ப பெற அந்நாட்டின் அதிபரிடம் வலியுறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஏப்ரல் 3-ஆம் தேதி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க வேண்டும். அவர்களின் படகுகளை விடுவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார். PM Modi 3 Days Srilanka Visit Live updates
இதனால் அதிபர் அனுர குமார திசநாயக்காவிடம் கச்சத்தீவு விவகாரம், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவது தொடர்பாக பிரதமர் மோடி விவாதிப்பாரா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

இலங்கை பயணம் தொடர்பாக மோடி வெளியிட்ட எக்ஸ் வலைதள பதிவில்,
“கொழும்பிலுள்ள இந்திய சமூகத்தினர் எனக்கு வழங்கிய ரம்மியமான வரவேற்புக்கு மழை கூட தடையாக இருக்கவில்லை. அவர்களது அன்பான அரவணைப்பு மற்றும் உற்சாகத்தினால் நான் மிகுந்த நெகிழ்ச்சி அடைந்தேன். அவர்களுக்கு எனது நன்றி” என்று தெரிவித்துள்ளார்.
இலங்கை பயணத்தை நிறைவு செய்துவிட்டு நாளை (ஏப்ரல் 6) மதியம் ராமேஸ்வரம் வரும் பிரதமர் மோடி, பாம்பன் புதிய பாலத்தை திறந்து வைக்கிறார்.