தமிழகத்தில் பதினோராம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
மாநில கல்விக் கொள்கையின் படி இந்த ஆண்டு முதல் பிளஸ் 1 பொது தேர்வு ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 8) மாநில கல்விக் கொள்கை அறிக்கையை வெளியிட்ட நிலையில், அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள், அடுத்த ஆண்டும் பொதுத் தேர்வை எழுதுவதால் அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. அதனைக் குறைக்கவும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை சிறப்பாக எழுதவும் பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
அதோடு எட்டாம் வகுப்பு வரை ஆல் பாஸ் நடைமுறை தொடரும், 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு மட்டுமே பொதுத்தேர்வு நடத்தப்படும் என்றும் மாநில கல்விக்கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
