அமைச்சரவையிலிருந்து செந்தில் பாலாஜியை நீக்கம் செய்த உத்தரவை நிறுத்தி வைப்பதாக ஆளுநர் எழுதிய கடிதத்தை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். ஜூலை 12 வரை நீதிமன்ற காவலில் உள்ளார். அதே சமயம் துறை இல்லாத அமைச்சராகச் செந்தில் பாலாஜி நீடிப்பார் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
நேற்று முன் தினம் இரவு செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கி உத்தரவிடுவதாகத் தமிழக அரசுக்குக் கடிதம் எழுதிய ஆளுநர் ஆர்.என்.ரவி அந்த உத்தரவை நிறுத்தி வைத்துள்ளார்.
இந்தச்சூழலில் வழக்கறிஞரும், தேசிய மக்கள் கட்சியின் தலைவருமான எம்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், ”அமைச்சரவையிலிருந்து செந்தில் பாலாஜியை நீக்கிய உத்தரவை நிறுத்தி வைத்த தமிழக ஆளுநரின் கடிதத்தை ரத்து செய்ய வேண்டும்” என கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும் அதில், “அரசியல் சாசனத்தின்படி ஆளுநர் எடுத்த முடிவை மறுபரிசீலனை செய்ய முடியாது. நீதிமன்றம் தான் அதை நீதித்துறை ஆய்வுக்கு உட்படுத்த முடியும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஆளுநர் முடிவு எடுத்த பிறகு, வேறு யாருடனும் கலந்து ஆலோசிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனு அடுத்து வாரம் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக இலாகா இல்லாத அமைச்சராகச் செந்தில் பாலாஜி நீடிப்பார் என்று தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக்கோரி எம்.எல்.ரவி தொடர்ந்த வழக்கு ஜூலை 7க்கு தள்ளிவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா
கலைஞர் நூற்றாண்டு விழா, மகளிர் உரிமைத்தொகை: சிறப்பு அதிகாரிகள்!