நடிகர் சிவாஜி வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய கோரி மனு தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது seeking cancellation of order to confiscate Shivajihouse
நடிகர் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகருமான துஷ்யந்த், அவரது மனைவி அபிராமி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள ஈசன் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் நடிகர் விஷ்ணுவிஷால், நடிகை நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடித்த ஜெகஜ்ஜால கில்லாடி திரைப்படம் தயாரிக்கப்பட்டது.
இதற்காக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம், 3 கோடியே 74 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தனர்.
இந்த படத் தயாரிப்பில் ஏற்பட்ட கடன் பிரச்சினை காரணமாக மயிலாப்பூரைச் சேர்ந்த தனபாக்கியம் என்டர்பிரைசஸ் சட்ட ரீதியான நடவடிக்கைகளில் இறங்கியது.
இந்த விவகாரத்தில் அசல், வட்டியுடன் சேர்த்து 9 கோடியே 39 லட்சம் ரூபாயை செலுத்த ஏதுவாக ஜெகஜ்ஜால கில்லாடி படத்தின் அனைத்து உரிமைகளையும், தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவன நிர்வாக இயக்குநரிடம் ஒப்படைக்கும்படி சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ரவீந்திரன் கடந்த 2024ஆம் ஆண்டு மே 4ஆம் தேதி அறிவுறுத்தினார்.
தனபாக்கியம் என்டர்பிரைசஸ் நிறுவனம், ‘மத்தியஸ்தர் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்துமாறு’ சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியது.
இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்தின் நிறுவனம் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.
ஜெகஜ்ஜால கில்லாடியான சிவாஜி பேரன்… அன்னை இல்லம் முழுவதும் ஜப்தியா? – தீர்ப்பு சொல்வது என்ன?
இந்த வழக்கு மீண்டும் இன்று (மார்ச் 5) விசாரணைக்கு வந்த போது துஷ்யந்த் தந்தை ராம்குமார், “சிவாஜி கணேசனின் வீட்டில் எனக்கும் எனது மகனுக்கும் எந்த பங்கும் இல்லை. எனது சகோதரர் நடிகர் பிரபு பெயரில் அந்த வீடு உள்ளது. பாகப்பிரிவினையின் படி தம்பி பிரபுவுக்கு சொந்தமானதாகும். எனவே ஜப்தி உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இது தொடர்பாக மனுத்தாக்கல் செய்ய இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.
இதை கேட்ட நீதிபதி உரிமையாளராக இல்லாத போது வீட்டை எப்படி ஜப்தி செய்ய முடியும் என்று கூறியதுடன், இந்த உத்தரவை ரத்து செய்ய கோரி மனு தாக்கல் செய்ய அனுமதி வழங்கினார்.
மேலும் இதுபோன்ற கடன் சம்பந்தமான வழக்குகளில் சொத்தை ஜப்தி செய்ய உத்தரவு பிறப்பிப்பது வழக்கமானது. அந்த உத்தரவுதான் இந்த வழக்கிலும் பிறப்பிக்கப்பட்டது என்று தெரிவித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், “இந்த உத்தரவு பிறப்பிக்கும் போது, அது யாருடைய வீடு என்று எனக்கு தெரியாது. செய்தித்தாள்களில் வந்த பிறகுதான், அது நடிகர் சிவாஜி கணேசனின் வீடு” என தெரியவந்தது என்று கூறியுள்ளார். seeking cancellation of order to confiscate Shivajihouse
கடன் பிரச்னைக்கு உரிய தீர்வுகாணும் படி ராம்குமார் தரப்புக்கு அறிவுரை வழங்கி, வழக்கை ஒத்திவைத்தார் நீதிபதி அப்துல் குத்தூஸ்.