டெல்லியில் குடியரசு தின கொண்டாட்டத்தில் தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.
தலைநகர் டெல்லியில் ஆண்டுதோறும் நடைபெறும் குடியரசு தின விழாவில் முப்படைகளின் அணிவகுப்பு, அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெறுவது வழக்கம். வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி நாட்டின் 77 ஆவது குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ளது.
இந்நிலையில் பல்வேறு மாநிலங்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் அலங்கார ஊர்திகள் பல்வேறு துறைகள் மற்றும் துணை ராணுவத்தின் அலங்கார ஊர்திகள் இடம்பெறும்.
அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி டெல்லியில் குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில் பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் அணிவகுக்க உள்ளன.
இதில் தமிழக அரசின் அலங்கார ஊர்தி இடம்பெற மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. பசுமை மின்சக்தி என்ற தலைப்பில் தமிழ்நாடு அரசு அலங்கார ஊர்தி அணிவகுப்பில் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2024 ஆம் ஆண்டு குடியரசு தின விழா அலங்கார ஊர்திகளில் தமிழ்நாடு பங்கேற்க மத்திய அரசு அனுமதி மறுத்ததால் கடும் சர்ச்சை ஏற்பட்டது. இதற்கு தமிழக அரசு சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
