தந்தை பெரியாரின் 50-ஆவது நினைவு தினம் இன்று (டிசம்பர் 24) அனுசரிக்கப்படுகிறது. இதை ஒட்டி சென்னை அண்ணாசாலை சிம்சன் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கி.வீரமணி, “பெரியாரின் கொள்கைகள் உலகம் முழுவதும் பயணம் செய்து கொண்டிருக்கிறது. பெரியார் என்பவர் ஓர் தனி மனிதர் அல்ல, அவர் ஓர் தத்துவம்.
பெரியாரை பார்க்காதவர்கள் அவரது கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அதனை பேராயுதமாக பயன்படுத்துகிறார்கள். இந்த நேரத்திலும் பெரியார் பலருக்கு அச்சுறுத்தலாக இருக்கிறார். பெரியார் எனும் தத்துவம் சாதி பிணி நீக்கும் மருத்துவமாகும்.
சாதி வர்ண தர்மம் இந்தியாவில் தளைக்க வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளுக்கு எதிராக பெரியார் தத்துவம் உள்ளது. எனவே இன்றைக்கும் பெரியார் பின்னால் நின்றாக வேண்டும். அனைவரும் சமம் என்ற சமூக நீதி இந்தியாவை உருவாக்குவோம். பேதம் வளர்க்கும் இந்துத்துவ இந்தியாவிற்கும், சமத்துவத்தை வலியுறுத்தும் திராவிட இந்தியாவிற்குமான போராட்டமாக தேர்தல் களம் இருக்கிறது” என்று தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து பெரியார் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பெரியார் நினைவு தினமான இன்று ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பண்பாட்டு ரீதியாக ஒடுக்கப்பட்டு, அடையாளங்கள் சிதைக்கப்பட்ட தமிழினத்தின் சுயமரியாதையைத் தட்டியெழுப்பி, சமத்துவ நெறியே தமிழர் நெறி எனப் பகுத்தறிவுப் பாதையில் நம்மையெல்லாம் நடைபோடச் செய்த தந்தை பெரியாரின் புகழைப் போற்றுவோம்.
“கணந்தோறும் இப்பெரிய தமிழ்நாடு எதிர்பார்க்கும் தலைவர் பெரியார்” என்று பாவேந்தர் பாடியதைக் காலந்தோறும் முழங்குவோம். வீறுகொண்டு எழுந்த நாம் ஒருபோதும் வீழமாட்டோம் எனச் சூளுரைத்து வீணர்களை வீழ்த்துவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
எம்ஜிஆர் நினைவு தினம்: எடப்பாடி மரியாதை!
தொடர் விடுமுறை: விமான கட்டணம் அதிகரிப்பு – எந்த ஊருக்கு, எவ்வளவு?