சினிமா பட இயக்குநர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் அருகே உள்ள அரணாரையைச் சேர்ந்தவர் சினிமா பட இயக்குநர் தமிழ் செல்வா என்ற செல்வராஜ்.
திமுக நிர்வாகியான இவர் சினிமா படங்களை இயக்குவதோடு, பல்வேறு குறும்படங்களையும் இயக்கி விருதுகளையும் பெற்றுள்ளார். இதனிடையே செல்வராஜ் மீது பெரம்பலூர் காவல் நிலையத்தில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளதோடு மட்டுமின்றி அப்பகுதியின் பிரபல ரவுடிகள் பட்டியலிலும் இவர் பெயர் இருக்கிறது.
இந்நிலையில், இன்று(ஜூன் 5 ) தன்னுடைய பிறந்த நாளை நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கொண்டாடி உள்ளார். அப்போது, அங்குள்ள பாரில் அவர்களுடன் அமர்ந்து மது அருந்தி உள்ளார்.
திடீரென அங்கு முகமூடி அணிந்த படி வந்த அடையாளம் தெரியாத நபர்கள் செல்வராஜை சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதை அறிந்து அங்குள்ளவர்கள் அலறி அடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

பின்னர், இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் எஸ்.பி. ஷ்யமளா தேவி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மேலும் கொலையாளிகள் விட்டுச்சென்ற தடயங்கள் மற்றும் சிசிடிவி கேமராக்கள் உதவியுடன் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
டிஜிட்டல் திண்ணை: ’கூட்டணி’யை வெளிச்சம் போட்டுக் காட்டிய அண்ணாமலை பிறந்தநாள்!
